தந்தை விபத்தில் சிக்கியதாக கூறி பள்ளியில் இருந்து மாணவியை அழைத்து சென்று பாலியல் தொல்லை - தொழிலாளிக்கு அடி-உதை


தந்தை விபத்தில் சிக்கியதாக கூறி பள்ளியில் இருந்து மாணவியை அழைத்து சென்று பாலியல் தொல்லை - தொழிலாளிக்கு அடி-உதை
x
தினத்தந்தி 12 Dec 2019 11:15 PM GMT (Updated: 12 Dec 2019 7:35 PM GMT)

குடியாத்தம் அருகே பள்ளியில் இருந்து மாணவியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.

குடியாத்தம், 

குடியாத்தத்தை அடுத்த மேல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியின் 11 வயது மகள் அருகே உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வருகிறாள். குடியாத்தத்தை அடுத்த குளிதிகை சாந்திநகர் பகுதியை சேர்ந்த வினோத் (வயது 30), தொழிலாளி. இவர், நேற்று மாலையில் மாணவி பயிலும் பள்ளிக்கு சென்றுள்ளார்.

அப்போது மாணவியிடம் உனது தந்தை விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளார். அதனால் உன்னை அழைத்து வர சொன்னார்கள் என கூறி மாணவியை அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கானாற்று ஓடை பகுதிக்கு அழைத்து சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார்.

இந்த நிலையில் மாணவியை அழைத்து சென்றது குறித்தும், மாணவியின் தந்தைக்கு விபத்து ஏற்பட்டது குறித்தும் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் மாணவியின் குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. விபத்து சம்பவம் நடைபெறாமல் தனது மகளை அழைத்து சென்றது குறித்து தகவல் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் மாணவியை தேடி விரைந்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கானாற்று பகுதியில் மாணவி, வினோத்திடம் இருந்து தப்பிக்க கூச்சலிட்டுள்ளாள். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் வினோத்திடம் இருந்து மாணவியை மீட்டனர். பின்னர் வினோத்தை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுதொடர்பாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கவிதா ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story