சேலத்தில் ஓடும் ஸ்கூட்டருக்கு சென்னையில் அபராதம் விதிப்பு - ‘ஹெல்மெட்’ அணியாமல் ஓட்டியதாக தபாலில் கடிதம் வந்ததால் பெண் அதிர்ச்சி


சேலத்தில் ஓடும் ஸ்கூட்டருக்கு சென்னையில் அபராதம் விதிப்பு - ‘ஹெல்மெட்’ அணியாமல் ஓட்டியதாக தபாலில் கடிதம் வந்ததால் பெண் அதிர்ச்சி
x
தினத்தந்தி 12 Dec 2019 11:15 PM GMT (Updated: 12 Dec 2019 8:23 PM GMT)

சேலத்தில் தான் ஓட்டி வரும் ஸ்கூட்டருக்கு, சென்னையில் ‘ெஹல்மெட’் அணியாமல் அந்த ஸ்கூட்டரை ஓட்டிச்சென்றதாக கூறி ரூ.100 அபராதம் விதித்து சேலம் பெண்ணுக்கு தபால் வந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:-

பனமரத்துப்பட்டி, 

சேலம் மாவட்டம், பன மரத்துப்பட்டி பழைய தபால் நிலைய தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. இவருடைய மனைவி கார்த்திகா (வயது 36). இவர் உள்ளூரில் பயன்படுத்துவதற்காக ஒரு ஸ்கூட்டர் வைத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மணலி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலுவலக முத்திரையுடன், கார்த்திகா பெயருக்கு ஒரு தபால் வந்தது. அந்த தபாலை பிரித்து பார்த்த போது அவர் அதிர்ச்சி அடைந்தார்.

அந்த தபாலில், கடந்த 3-ந் தேதி சென்னை மணலி போக்குவரத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 200 அடி சாலையில் கார்த்திகா, ‘ெஹல்மெட்’ அணியாமல் அவரது ஸ்கூட்டரை ஓட்டிச்சென்றதாகவும், அதற்கு அபராத தொகையாக ரூ.100-ஐ 24 மணி நேரத்தில் செலுத்துமாறும் கூறப்பட்டு இருந்தது.

அதில் கார்த்திகாவின் ஸ்கூட்டர் பதிவு எண் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் இந்த அபராத தொகையை தமிழ்நாடு போலீஸ் இணைய தளத்திற்கு சென்று ஆன்-லைனில் கட்டுமாறும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இது குறித்து கார்த்திகா கூறியதாவது:-

சம்பவம் நடந்த நாளில் அதாவது கடந்த 3-ந் தேதி நான் பனமரத்துப்பட்டியில் எனது வீட்டில் இருந்தேன். குறிப்பிட்ட பதிவெண் கொண்ட அந்த ஸ்கூட்டரும் எனது வீட்டில் தான் நின்றது. மேலும் எனது ஸ்கூட்டரில் இதுவரை சென்னைக்கு சென்றது கூட கிடையாது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளேன். எனது ஸ்கூட்டர் பதிவெண்ணுடன் சென்னையில் வேறு ஒரு ஸ்கூட்டர் இயக்கப்படுகிறதோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனது இந்த புகார் குறித்து சம்பந்தப்பட்ட போலீசார் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- சென்னையில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போக்குவரத்து விதிமீறும் வாகனங்களின் பதிவு எண்ணை பார்த்து அபராதம் விதிக்கும் நடைமுறையும் உள்ளது. அவ்வாறான நடை முறையில் சம்பந்தப்பட்ட பதிவு எண்ணுடன் கூடிய வாகன உரிமையாளருக்கு இந்த அபராதம் விதிப்பு கடிதம் அனுப்பப்படுவது வழக்கம்.

ஆனால் சம்பந்தப்பட்ட பெண், சேலம் மாவட்டத்தில் தான் இருப்பதாலும், அவரது வாகனமும் சென்னைக்கு எடுத்து செல்லப்படாத நிலையில், அங்கு போலி வாகன பதிவு எண்ணுடன் ஸ்கூட்டர் இயக்கப்பட்டு இருக்கலாம். அந்த ஸ்கூட்டர் யாருடையது? அது திருட்டு ஸ்கூட்டரா? என்ற கோணத்தில் விசாரித்தால் தான் தெரியும்.

இந்த விஷயத்தில் சென்னை மணலி போக்குவரத்து போலீசார் எதன் அடிப்படையில் இந்த கடிதத்தை அனுப்பி உள்ளனர் என்பது குறித்து விசாரித்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும். போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தி ெஹல்மெட் அணியாதவர் களுக்கு அபராதம் விதித்து வரும் நிலையில், சென்னைக்கு செல்லாத ஒரு நபருக்கு, அவர் எடுத்து செல்லாத வண்டியின் பெயரில் அபராதம் விதி்த்து தபால் அனுப்பியது வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story