மாவோயிஸ்டுகள் தொடர்பான வழக்கு: போலீஸ் துணை சூப்பிரண்டு உள்பட 3 பேர் கோர்ட்டில் சாட்சியம்


மாவோயிஸ்டுகள் தொடர்பான வழக்கு: போலீஸ் துணை சூப்பிரண்டு உள்பட 3 பேர் கோர்ட்டில் சாட்சியம்
x
தினத்தந்தி 12 Dec 2019 9:45 PM GMT (Updated: 12 Dec 2019 10:24 PM GMT)

மாவோயிஸ்டுகள் தொடர்பான வழக்கில் திண்டுக்கல் கோர்ட்டில் போலீஸ் துணை சூப்பிரண்டு உள்பட 3 பேர் சாட்சியம் அளித்தனர்.

திண்டுக்கல், 

கொடைக்கானல் வடகவுஞ்சி வனப்பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து, ஆயுதப்பயிற்சி மேற்கொண்டனர். இதையறிந்த சிறப்பு அதிரடிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று, அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், நவீன்பிரசாத் என்ற மாவோயிஸ்டு கொல்லப்பட்டார். மேலும் தப்பியோடிய 7 பேரை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்றும், நீதிபதி ஜமுனா முன்னிலையில் மாவோயிஸ்டுகள் வழக்கு தொடர்பாக விசாரணை நடந்தது. அப்போது சிறையில் இருக்கும் மாவோயிஸ்டுகளான கண்ணன், பகத்சிங், காளிதாஸ், செண்பகவல்லி, ரீனாஜாய்ஸ்மேரி ஆகியோரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் ஜாமீனில் வெளியே இருக்கும் ரஞ்சித், நீலமேகம் ஆகியோரும் ஆஜராகினர்.

இதையடுத்து அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது. இதில் ராமநாதபுரம் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்ரகு, மதுரை அரசு மருத்துவமனை டாக்டர் வித்யா, வடகவுஞ்சியை சேர்ந்த கருப்புச்சிநாதன் ஆகியோர் சாட்சியம் அளித்தனர். அப்போது மாவோயிஸ்டுகளிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீஸ் துணை சூப்பிரண்டுவிடம், மாவோயிஸ்டுகள் தரப்பு வக்கீல் கண்ணப்பன் குறுக்கு விசாரணை செய்தார்.

அதேபோல் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுவின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்த டாக்டரிடமும் அவர் குறுக்கு விசாரணை நடத்தினார். பின்னர் அரசு தரப்பில் வக்கீல் மனோகரன் வாதாடினார். இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வரும் போது, திண்டுக்கல் கோர்ட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். அதன்படி நேற்று மாவோயிஸ்டுகள் வழக்கு விசாரணை நடந்ததால், கோர்ட்டு வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் வழக்கு விசாரணைக்கு வருவோர் தீவிர சோதனைக்கு பின்னரே கோர்ட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Next Story