டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்ட குடியிருப்பு, கல்வி நிறுவனங்களுக்கு ரூ.6 லட்சம் அபராதம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்


டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்ட குடியிருப்பு, கல்வி நிறுவனங்களுக்கு ரூ.6 லட்சம் அபராதம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்
x
தினத்தந்தி 13 Dec 2019 10:15 PM GMT (Updated: 13 Dec 2019 5:48 PM GMT)

டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்ட குடியிருப்புகள், தனியார் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நெல்லை, 

டெங்கு காய்ச்சலை பரப்பும் லார்வா கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் மாநகராட்சியின் 4 மண்டல பகுதிகளுக்கும் மாநகராட்சி அலுவலர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு தொடர்ந்து ஆய்வு செய்யும் பரிசோதனை பணிகள் நடந்து வருகின்றன.

ஏற்கனவே குடியிருப்புகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், உணவு கூடங்கள், மருத்துவமனைகள், கட்டுமான பணிகள் சோதனை செய்யப்பட்டு கொசுப்புழு கண்டறியப்பட்டது. கடந்த 10-ந் தேதி வரை ரூ.5 லட்சத்து 130 அபராதம் விதிக்கப்பட்டது.

நேற்று கொசுப்புழு கண்டறியப்பட்ட குடியிருப்புகள், தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கு மொத்தம் ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மாவட்ட கலெக்டர் அறிவுரையின் படி பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், மருத்துவமனைகள், பணிமனைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் கொசுப்புழு இல்லை என்பதை வாராந்திர சான்று அளிப்பது குறித்து உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது,

Next Story