மாவட்ட சிறைச்சாலையில் போலீசார் சோதனை


மாவட்ட சிறைச்சாலையில் போலீசார் சோதனை
x
தினத்தந்தி 14 Dec 2019 11:00 PM GMT (Updated: 14 Dec 2019 7:17 PM GMT)

புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட சிறைச்சாலை மற்றும் பார்ஸ்டல் பள்ளியில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட சிறைச்சாலை மற்றும் பார்ஸ்டல் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த மாவட்ட சிறைச்சாலை மற்றும் பார்ஸ்டல் பள்ளியில் ஒவ்வொரு மாதமும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி, போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்கம்போல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவின்பேரில் நேற்று புதுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலகிரு‌‌ஷ்ணன் தலைமையில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்ட சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

1 மணி நேரம்

அப்போது போலீசார் கைதிகளின் ஒவ்வொரு அறையாக சென்று, அங்கு தீவிர சோதனை நடத்தினார்கள். பின்னர் போலீசார் குளிக்கும் அறை, கழிவறைகள் போன்றவற்றிற்கும் சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது சிறையில் தடை செய்யப்பட்டு உள்ள செல்போன்கள், போதை பொருட்கள், ஆயுதங்கள் போன்ற பொருட்கள் கைதிகளிடம் உள்ளதா? என போலீசார் சோதனை நடத்தினார்கள். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்த இந்த சோதனையில் எந்த பொருட்களும் கைப்பற்றப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளியில் போலீசார் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story