சிறப்பு நலவாழ்வு முகாமில் பங்கேற்க திருச்சியில் இருந்து 3 யானைகள் தேக்கம்பட்டி சென்றன


சிறப்பு நலவாழ்வு முகாமில் பங்கேற்க திருச்சியில் இருந்து 3 யானைகள் தேக்கம்பட்டி சென்றன
x
தினத்தந்தி 14 Dec 2019 10:30 PM GMT (Updated: 14 Dec 2019 7:36 PM GMT)

சிறப்பு நலவாழ்வு முகாமில் பங்கேற்க திருச்சியில் இருந்து 3 யானைகள் தேக்கம்பட்டிக்கு சென்றன.

ஸ்ரீரங்கம்,

இந்து சமய அறநிலையத்துறையினரால் ஆண்டுதோறும் கோவில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளின் நலவாழ்வு கருதியும், அவை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் மற்றும் அதற்கு புத்துணர்வு அளிப்பதற்காகவும் சிறப்பு நலவாழ்வு முகாமிற்கு யானைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இம்முகாமில் யானைகளுக்கு தினமும் காலை, மாலை நடைபயிற்சியும், பசுந்தீவனம், சத்தான உணவு, ஊட்டச்சத்துடன் கூடிய இயற்கை மருந்துகளும் வழங்கப்படும். இந்தாண்டிற்கான யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் உள்ள பவானி ஆற்றங்கரையில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 48 நாட்கள் நடைபெறுகிறது.

3 யானைகள்

இதையொட்டி முகாமில் பங்கேற்க திருச்சியில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஆண்டாள் யானை, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் அகிலா யானை, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் லட்சுமி யானை ஆகிய 3 யானைகளை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் ரோட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் அலுவலகம் முன்பு நடந்த இந்நிகழ்ச்சியில் 3 யானைகளும் லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன. முன்னதாக யானைகள் புறப்பட்ட லாரியை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஸ்ரீரங்கம் கோவில் இணை உதவி ஆணையர் கந்தசாமி, திருவானைக்காவல் கோவில் உதவி ஆணையர் மாரியப்பன், மலைக்கோட்டை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story