கோலார் புறநகரில் அமைந்துள்ள காசி விஸ்வேஸ்வரர் கோவிலில் கொள்ளை முயற்சி - கண்காணிப்பு கேமராக்களை திருடிச்சென்ற மர்ம நபர்கள்


கோலார் புறநகரில் அமைந்துள்ள காசி விஸ்வேஸ்வரர் கோவிலில் கொள்ளை முயற்சி - கண்காணிப்பு கேமராக்களை திருடிச்சென்ற மர்ம நபர்கள்
x
தினத்தந்தி 14 Dec 2019 10:45 PM GMT (Updated: 14 Dec 2019 7:44 PM GMT)

கோலார் புறநகரில் அமைந்துள்ள காசி விஸ்வேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். அவர்களுடைய முயற்சி தோல்வி அடைந்ததால் போலீசில் சிக்காமல் இருப்பதற்காக கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை அவர்கள் திருடிச்சென்று விட்டனர்.

கோலார் தங்கவயல்,

கோலார் புறநகர் அந்தரகங்கே மலையில் அமைந்துள்ளது காசி விஸ்வேஸ்வரர் கோவில். நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்து கோவிலை பூட்டிவிட்டு அர்ச்சகர்களும், ஊழியர்களும் சென்றுவிட்டனர். நேற்று காலையில் அவர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது கோவிலின் பின்புற நுழைவு வாயில் இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. மேலும் கோவிலுக்குள் இருந்த உண்டியல்களின் பூட்டையும் உடைக்க முயற்சி நடந்திருந்தது.

யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் கோவிலின் பின்புற இரும்பு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, உண்டியல்களில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதையடுத்து அவர்கள் தங்களை போலீசார் பிடித்து விடக்கூடாது என்பதற்காக கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து அவற்றை திருடிச் சென்றுவிட்டது அர்ச்சகர்களுக்கும், கோவில் ஊழியர்களுக்கும் தெரியவந்தது.

இதுபற்றி அவர்கள் கோலார் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கிருந்த தடயங்களை பதிவு செய்து கொண்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதையடுத்து போலீசார் தாங்கள் கைப்பற்றிய தடயங்களை ஆய்வுக்காக தடய அறிவியல் பிரிவினருக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story