பெங்களூருவில் கொலை-கொள்ளை சம்பவங்களை தடுக்க வேண்டும் - போலீசாருக்கு எடியூரப்பா உத்தரவு


பெங்களூருவில் கொலை-கொள்ளை சம்பவங்களை தடுக்க வேண்டும் - போலீசாருக்கு எடியூரப்பா உத்தரவு
x
தினத்தந்தி 17 Dec 2019 9:53 PM GMT (Updated: 17 Dec 2019 9:53 PM GMT)

பெங்களூருவில் கொலை-கொள்ளை சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு சைபர் குற்றம், பொருளாதார குற்றங்கள், போதைப்பொருள் தடுப்பு போலீஸ் நிலையங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, அந்த பிரிவுகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-

பெங்களூருவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறுவதை போலீசார் தடுக்க வேண்டும். சமீபகாலமாக பொருளாதார குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் முதலீடு செய்யும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் தடுப்பு போலீஸ் நிலையங்கள், வரும் நாட்களில் மாநிலத்தின் பிற நகரங்களிலும் தொடங்கப்படும்.

ஆன்லைன் மூலம் நடை பெறும் பண பரிவர்த்தனையில் முறைகேடுகள் நடப்பது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து வங்கி அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். பயங்கரவாத தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. இது பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்க உதவும். நெடுஞ்சாலைகளில் ரோந்து வாகனங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது.

கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பான முறையில் அமல்படுத்தப்படுகிறது. நமது மாநிலத்தில் குற்றங்களை தடுக்கவும், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் உழைக்கும் போலீசாரின் நலனை காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி குற்றங்களை தடுக்கும் பணியை போலீசார் சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறார்கள். இது நாட்டிலேயே முன்மாதிரி என்று நினைக்க தோன்றுகிறது.

பல்வேறு முக்கியமான குற்றங்களில் தவறு செய்தவர்களை கண்டறிந்து கைது செய்த பெருமை கர்நாடக போலீஸ் துறைக்கு உண்டு. சைபர் குற்ற பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் பெங்களூருவில் தொடங்கப்பட்டு உள்ளது. நெடுஞ்சாலைகளில் குழந்தைகள் மற்றும் பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகும்போது, போலீசார் விரைந்து சென்று அவர்களை காப்பாற்ற வேண்டும். விபத்தில் சிக்குபவர்கள் 100, 108, 112 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் புகார்களை தெரிவிக்கலாம்.

புகார்களை பெற்ற 60 வினாடிகளில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 20 நிமிடங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடைபெறும் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். சாலை விபத்துகளில் சிக்குபவர்கள் முதல்-மந்திரி ஆறுதல் திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த விழாவில் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, போலீஸ் துறை கூடுதல் தலைமை செயலாளர் ரஜனீஸ் கோயல், போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் ரோந்து வாகனங்களின் சேவையை எடியூரப்பா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

Next Story