4 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த முடிவு: இழப்பீட்டு தொகையை உயர்த்தி கேட்டு கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


4 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த முடிவு: இழப்பீட்டு தொகையை உயர்த்தி கேட்டு கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 20 Dec 2019 10:30 PM GMT (Updated: 20 Dec 2019 7:02 PM GMT)

4 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

விழுப்புரம்,

விழுப்புரம்- புதுச்சேரி மற்றும் கடலூர்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிப்பாதைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் விழுப்புரம்- புதுச்சேரி 4 வழிச்சாலைக்காக விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் கிராமத்தில் 100 வீடுகள் மற்றும் 4 கடைகளை கையகப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

இதற்காக முதல்கட்டமாக 75 வீடுகளின் உரிமையாளர்களுக்கும், 4 கடைகளின் உரிமையாளர்களுக்கும் அவர்களது வங்கி கணக்கில் எந்தவித முன்அறிவிப்பும் இன்றி கடந்த 8.10.2018 அன்று இழப்பீட்டு தொகை செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் உரிய இழப்பீட்டு தொகை வழங்கவில்லை என்றும், இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்கக்கோரியும் நேற்று காலை கெங்கராம்பாளையம் கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயிலை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள், மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

4 வழிச்சாலை பணிக்காக வீடுகள், கடைகளை கையகப்படுத்த அளவு எடுத்து சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் இழப்பீட்டு தொகை செலுத்தியுள்ளனர். எவ்வித முன்அறிவிப்பின்றி 1 சதுர அடிக்கு எவ்வளவு தொகை, 1 சதுர மீட்டருக்கு எவ்வளவு தொகை என்று அறிவிப்பில்லாமல் வங்கிகளில் பணத்தை செலுத்திவிட்டனர். இதில் குறைந்த அளவிலேயே தொகை வழங்கி உள்ளனர். ஆனால் அருகில் உள்ள கண்டமங்கலம் ஊராட்சி பகுதிக்கு இழப்பீட்டு தொகை எங்கள் பகுதியை காட்டிலும் அதிகமாக கொடுக்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்?.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் 1 சதுரடிக்கு எவ்வளவு ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்குகிறீர்கள் என்று தெரியாமல் எங்கள் நிலங்கள், வீட்டுமனைகளை கையகப்படுத்த நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story