வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி: சென்னையில் போலி ஐ.பி.எஸ். அதிகாரி கைது


வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி: சென்னையில் போலி ஐ.பி.எஸ். அதிகாரி கைது
x
தினத்தந்தி 21 Dec 2019 11:30 PM GMT (Updated: 21 Dec 2019 7:34 PM GMT)

வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி செய்த, போலி ஐ.பி.எஸ். அதிகாரி சென்னையில் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சரோஜாதேவி என்பவர் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், ‘சென்னையை சேர்ந்த டேனியல்ராஜ் என்பவர் தன்னை தமிழக கவர்னரின் நேர்முக உதவியாளர் என்று என்னிடம் அறிமுகம் ஆனார். நான் அவரிடம் எனது சகோதரருக்கு அரசு வேலை வாங்கி தருமாறு கேட்டேன்.

சென்னை துறைமுகத்தில் என்ஜினீயர் வேலை இருப்பதாகவும், அதற்கு ரூ.13 லட்சம் செலவாகும் என்றும் கூறினார். நானும் அவர் கேட்ட பணத்தை கொடுத்தேன். ஆனால் வேலை வாங்கித்தரவில்லை. பணத்தையும் தரவில்லை. அவர் ஒரு மோசடி பேர்வழி என்று பின்னர் தெரிந்துகொண்டேன். என்னை போன்று பலரும் அவருடைய மோசடி வலையில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர். எனவே அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி நேரடி மேற்பார்வையில் வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த டேனியல்ராஜ் போலீசாரிடம் சிக்கினார். அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

டேனியல்ராஜ், தன்னை விஜயகுமார் ஐ.பி.எஸ். அதிகாரி என்று கூறி வலம் வந்துள்ளார். மேலும் ஜனாதிபதி, கவர்னர், மத்திய மந்திரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் நிற்பது போன்று ‘மார்பிங்’ செய்து போலியான படங்களை தயாரித்து, அவர்களுடைய சிபாரிசு தனக்கு இருப்பதாக கூறி வந்துள்ளார். இதனை நம்பி அவரை அணுகிய இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.1 கோடி வரை மோசடி செய்துள்ளார்.

மேலும் அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் மத்திய குற்றப்பிரிவு போலீசில் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.

வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட டேனியல்ராஜூக்கு ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சேஷையா, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த தியாகராஜ் உள்பட பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

அவர்களை பிடிக்கும் வேட்டையில் மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Next Story