சேலத்தில், நகை பறிப்பில் ஈடுபட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது


சேலத்தில், நகை பறிப்பில் ஈடுபட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 21 Dec 2019 10:45 PM GMT (Updated: 21 Dec 2019 9:15 PM GMT)

சேலத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சேலம்,

இளம்பிள்ளையை சேர்ந்தவர் ராஜகோபால். தொழிலாளி. இவர் கடந்த 10-ந் தேதி சேலம் தமிழ்சங்கம் பிரிவு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சின்னதிருப்பதி மீனாட்சி நகரை சேர்ந்த ரவுடி பிரகா‌‌ஷ் (வயது 27) என்பவர் வந்தார்.

அவர் திடீரென ராஜகோபாலை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ஒரு பவுன் நகையை பறித்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழிப்பறியை தடுக்க வந்த பொதுமக்களையும் பிரகா‌‌ஷ் கத்தியை காட்டி மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து ராஜகோபால் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் பிரகாசை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர், துணை போலீஸ் கமி‌‌ஷனர் தங்கதுரை ஆகியோர் மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமாருக்கு பரிந்துரை செய்தனர்.

இதை ஏற்று அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள பிரகா‌சிடம் போலீசார் வழங்கினர்.

Next Story