ஜனாதிபதி நாளை வருகை: புதுச்சேரி போலீசார் பாதுகாப்பு ஒத்திகை


ஜனாதிபதி நாளை வருகை: புதுச்சேரி போலீசார் பாதுகாப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 21 Dec 2019 10:45 PM GMT (Updated: 21 Dec 2019 10:08 PM GMT)

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை புதுச்சேரி வர உள்ள நிலையில் புதுச்சேரி போலீசார் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் சுற்றுப் பயணமாக நாளை (திங்கட் கிழமை) புதுச்சேரி வருகிறார். சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு அவர் ஹெலிகாப்டர் மூலம் வருகிறார்.

அங்கு அவரை கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர். விமான நிலையத்தில் போலீசாரின் மரியாதையை ஏற்றுக்கொள்ளும் அவர் கார் மூலம் காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கு சென்று பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

அரவிந்தர் ஆசிரமம்

அதன்பின் கவர்னர் மாளிகைக்கு வந்து மதிய உணவு சாப்பிடும் அவர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் அரவிந்தர் ஆசிரமத்தை பார்வையிடுகிறார். தொடர்ந்து ஆரோவில் சென்று மாத்ரி மந்திரை பார்வையிடுகிறார்.

அதன்பின் புதுவைக்கு திரும்பி வரும் அவர் கவர்னர் மாளிகையில் இரவு தங்குகிறார். தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலையில் புதுவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் செல்கிறார். அங்கு தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் அவர் சனி சன்னதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு தொடர்ந்து தர்பாரண்யேஸ்வரரை தரிசிக்கிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார்.

பாதுகாப்பு ஒத்திகை

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி செல்லும் வழியெங்கிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இரவு பகலாக வாகன சோதனை, விடுதிகளில் சோதனை நடந்து வருகிறது. ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக ஆந்திர மாநிலத்திலிருந்து ஜாமர் கருவி பொருத்திய வாகனமும் வந்துள்ளது.

இந்தநிலையில் இறுதிகட்ட பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடந்தது. விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு போலீஸ் மரியாதை அளிப்பது, அவர் செல்லும் இடங்களுக்கு காரில் அழைத்து செல்வது போன்று ஒத்திகை நடத்தினார்கள்.

ஹெலிகாப்டர்கள்

மேலும் இந்திய விமானப் படைக்கு சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் புதுவை விமான நிலையத்தில் ஏற்றி, இறக்கி சோதித்து பார்க்கப்பட்டது. போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, கலெக்டர் அருண், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் ராகுல் அல்வால், நிகரிகாபட் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒத்திகை நடந்தது.

ஜனாதிபதியின் பயண திட்ட விவரம்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை காலை 11.10 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து வி்மானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் புறப்பட்டு 12 மணிக்கு புதுச்சேரி விமான நிலையம் வருகிறார். அங்கு அளிக்கப்படும் வரவேற்பினை ஏற்றுக்கொண்டு 12.15மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 12.30 மணிக்கு பல்கலைக்கழகத்தை அடைகிறார்.

12.40 மணிக்கு பட்டமளிப்பு விழா தொடங்கி 1.40 மணிவரை நடக்கிறது. இந்த விழாவில் கலந்துகொண்டு பட்டங்களை வழங்குகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் 1.55 மணிக்கு கவர்னர் மாளிகையை அடைகிறார்.

அங்கு மதிய உணவு சாப்பிடும் அவர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன்பின் 3 மணிக்கு அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று பார்வையிடுகிறார். தொடர்ந்து ஆரோவில் சென்று மாத்ரி மந்திரையும் பார்க்கிறார். அங்கிருந்து 4.40 மணிக்கு புறப்பட்டு 5 மணிக்கு கவர்னர் மாளிகையை அடைகிறார்.

கவர்னர் மாளிகையில் முக்கிய பிரமுகர்களை அவர் சந்திக்க வாய்ப்பு உள்ளது. அதன்பின் இரவு கவர்னர் மாளிகையில் தங்குகிறார். நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9.15 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து புறப்படும் அவர் 9.30 மணிக்கு புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு 10.20 மணிக்கு காரைக்காலை சென்றடைகிறார்.

ஜனாதிபதி வருகையொட்டி நாளை, நாளை மறுநாள் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்படுகிறது. ஜனாதிபதி நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும்போது அவர் செல்லும்பாதையில் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்படும். அந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்த வேண்டுமென போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story