கரூர்-தாந்தோணி உள்பட 4 ஒன்றியங்களில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்


கரூர்-தாந்தோணி உள்பட 4 ஒன்றியங்களில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 22 Dec 2019 11:00 PM GMT (Updated: 22 Dec 2019 4:24 PM GMT)

கரூர், தாந்தோணி உள்பட 4 ஒன்றியங்களில் முதல் கட்ட தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், தாந்தோணி, க.பரமத்தி, அரவக்குறிச்சி ஆகிய ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான முதல் கட்ட தேர்தல் வருகிற 27-ந்தேதியும், கிரு‌‌ஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை, கடவூர் ஆகிய ஒன்றியங்களுக்கு வருகிற 30-ந்தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதன் அடிப்படையில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 48-ம், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினருக்கு 425-ம், ஊராட்சி மன்ற தலைவருக்கு 513-ம், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினருக்கு 2,654-ம் என மொத்தம் 3,640 வேட்பாளர்கள் கரூர் மாவட்ட தேர்தல் களத்தில் இருக்கிறார்கள். இதனால் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் அரசியல் கட்சியினர், சுயேச்சைகளின் தேர்தல் பிரசாரம் களை கட்டி வருகிறது.

வாக்குப்பெட்டிகளை பார்வையிட்டு அதிகாரி ஆய்வு

மேலும் இதில் அனைத்து வாக்காளர்கள் வாக்களிக்க 965 வாக்குச்சாவடிகளும், 9 பெண் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளும், 9 ஆண் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 983 வாக்குச்சாவடிகள் உள்ளன. 8 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 5,33,295 பேர் வாக்காளர்களாக இருக்கின்றனர். இதில் 2,60,079 ஆண்களும், 2,73,166 பெண்களும், இதர வாக்காளர்கள் 50 பேரும் அடங்குவர். இந்த நிலையில் வாக்குச்சாவடிகளில் பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ள 7,882 அலுவலர்களுக்கு வாக்குப் பதிவு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒருவர் 4 ஓட்டுகளை வாக்குசீட்டுகள் மூலம் பதிவு செய்திட வேண்டும். முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் தாந்தோன்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பெட்டிகள் சீர் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. வாக்குப்பெட்டிகளை ஒரு அறையில் வரிசையாக அடுக்கி வைத்து, அவை எழுதில் திறக்க, மூடும் வகையில் உள்ளதா? சேதமடைந்த வகையில் ஏதேனும் வாக்குப்பெட்டி உள்ளதா? என வட்டார வளர்ச்சி அதிகாரியும், ஒன்றிய தேர்தல் அதிகாரியுமான மனோகரன் உள்பட அதிகாரிகள் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வாக்குப்பதிவுக்கான பொருட்கள் வந்துவிட்டன

பின்னர் வாக்குப்பதிவு நாளின்போது வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தக்கூடிய பேனா, பென்சில், மை பாட்டில், குண்டூசி, தீப்பெட்டி, மெழுகு, சிறிய கத்தி, பசை உள்ளிட்ட பொருட்கள் தாந்தோன்றி ஒன்றிய அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. வாக்கு செலுத்தப்படக்கூடிய இடத்தினை மறைமுகமாக வைக்க பயன்படும் அட்டைகள் போன்றவையும் அங்குள்ள அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தாந்தோணியில் 397 வாக்குப்பெட்டிகள் இருப்பு உள்ளது. அந்த வகையில் வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குப்பதிவுக்கான பொருட்களை பிரித்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 3,660 வாக்குப்பெட்டிகள் இருப்பில் உள்ளன. கரூர், க.பரமத்தி உள்பட மற்ற ஒன்றியங்களிலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் கவனித்து வருகின்றனர். தாந்தோணி ஒன்றியத்துக்கு வாக்கு எண்ணும் மையமாக மணல்மேடு என்.எஸ்.என். என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. மற்ற ஒன்றியங்களிலும் வாக்கு எண்ணும் மையங்கள் தயார் படுத்தப்பட்டு வருகின்றன.

Next Story