வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கும் பணி தேர்தல் பார்வையாளர் பிரபாகர் பார்வையிட்டார்


வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கும் பணி தேர்தல் பார்வையாளர் பிரபாகர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 22 Dec 2019 10:30 PM GMT (Updated: 22 Dec 2019 8:14 PM GMT)

குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோட்டில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கும் பணியை தேர்தல் பார்வையாளர் பிரபாகர் நேரில் பார்வையிட்டார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கல்லூரியில் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை தேர்தல் பார்வையாளர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைப்பதற்கான பாதுகாப்பு அறையினை தேர்தல் பார்வையாளர் பார்வையிட்டு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகள் அனைத்தையும் வைக்க போதுமான இடவசதி உள்ளதா ? என்று பார்வையிட்டார்.

மேலும் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைப்பதற்கான உறுதியான அறை, வாக்கு எண்ணும் அறை, வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருவதற்கான தனித்தனியான பாதை அமைப்பு, பாதுகாப்பு வசதிகள், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் குறித்து தேர்தல் பார்வையாளர் பார்வையிட்டார்.

திருச்செங்கோடு

தொடர்ந்து திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு வரும் பணியினையும், எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு வரும் பணியினையும் தேர்தல் பார்வையாளர் நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) சிவசண்முகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story