வத்தலக்குண்டு அருகே, தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் சாவு - மனைவிக்கு ஓட்டு கேட்டு சென்றபோது பரிதாபம்


வத்தலக்குண்டு அருகே, தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் சாவு - மனைவிக்கு ஓட்டு கேட்டு சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 23 Dec 2019 11:00 PM GMT (Updated: 23 Dec 2019 7:18 PM GMT)

வத்தலக்குண்டு அருகே தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் இறந்தார். மனைவிக்கு ஓட்டு கேட்டு சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

வத்தலக்குண்டு, 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 60). இவர், பழைய வத்தலக்குண்டு ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். தற்போது பழைய வத்தலக்குண்டுவில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து முருகேசனின் மனைவி யசோதை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து அதே ஊரை சேர்ந்த ஹேமஸ்ரீ என்பவர் போட்டியிட்டார். களத்தில் 2 பேர் மட்டுமே உள்ளதால் இரு தரப்பினரும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் யசோைதக்கு ஆதரவாக முருகேசன் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பழைய வத்தலக்குண்டு பகுதியில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உடன் சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், முருகேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக டாக்டர்கள் கூறினர். உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் திடீரென்று வேட்பாளரின் கணவர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story