குழந்தைகள் தண்ணீர் குடிக்க 20 நிமிடம் ஒதுக்கீடு: கர்நாடகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ‘குடிநீர் பெல்’ முறை - அமல் மாநில அரசு உத்தரவு


குழந்தைகள் தண்ணீர் குடிக்க 20 நிமிடம் ஒதுக்கீடு: கர்நாடகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ‘குடிநீர் பெல்’ முறை - அமல் மாநில அரசு உத்தரவு
x
தினத்தந்தி 23 Dec 2019 11:41 PM GMT (Updated: 23 Dec 2019 11:41 PM GMT)

கர்நாடகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ‘குடிநீர் பெல்‘ முறை அமல்படுத்த மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன் மூலம் தண்ணீர் குடிக்க 20 நிமிடம் ஒதுக்கப்படுகிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் சரியாக குடிநீரை குடிப்பது இல்லை என்றும், அதனால் உடல் ரீதியாக சில பாதிப்புகள் ஏற்படுவதாகவும் புகார்கள் நீண்ட காலமாக இருக்கின்றன.

இந்த நிலையில் கேரளா மாநிலத்தில், குடிநீர் குடிக்கவே காலை மற்றும் நண்பகலில் 2 முறை ‘குடிநீர் பெல்‘ நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதே நடைமுறை கர்நாடகத்திலும் அமல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் ஏற்கனவே தனது முகநூல் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் ‘குடிநீர் பெல்‘ நடைமுறை அமல்படுத்த மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் காலையில் ஒரு முறை, மதிய உணவுக்கு பிறகு என ஒரு முறை ஒரு நாளைக்கு 2 முறை இந்த ‘குடிநீர் பெல்‘ ஒலிக்க செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் 10 நிமிடம் வீதம் 20 நிமிடம் ஒதுக்க வேண்டும். இந்த 20 நிமிடத்தில் குழந்தைகள் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இந்த விதிமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story