காரையூர் அருகே இடத்தகராறில் ஜவுளிக்கடை உரிமையாளர் அடித்துக்கொலை சகோதரர்கள் வெறிச்செயல்


காரையூர் அருகே இடத்தகராறில் ஜவுளிக்கடை உரிமையாளர் அடித்துக்கொலை சகோதரர்கள் வெறிச்செயல்
x
தினத்தந்தி 24 Dec 2019 11:00 PM GMT (Updated: 24 Dec 2019 4:15 PM GMT)

காரையூர் அருகே இடத்தகராறில் ஜவுளிக்கடை உரிமையாளரை சகோதரர்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரையூர்,

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே உள்ள எழுவன்குறைப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 25). இவர் பொன்னமராவதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவருடைய சித்தப்பாவான சுப்பையாவின் மகன்கள் சரவணன் (22), மணிராஜா (25). இவர்கள், மணிகண்டன் வீட்டின் அருகே வசித்து வருகின்றனர்.

மணிகண்டன் வீட்டிற்கு பின்னால் உள்ள இடம் தொடர்பாக அவருக்கும், சரவணன், மணிராஜா ஆகியோருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. மேலும் இது தொடர்பாக அவர்கள் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.

அடித்துக்கொலை

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் கடையை பூட்டிவிட்டு, வீட்டுக்கு வந்தார். அவர் வீட்டின் அருகே வந்தபோது, அப்பகுதியில் சரவணன், மணிராஜா ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து அவருக்கும், சரவணன், மணிராஜா ஆகியோருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், தான் வைத்திருந்த கத்தியால் சரவணன், மணிராஜா ஆகியோரை குத்தியுள்ளார். இதையடுத்து மணிராஜா, சரவணன் ஆகியோர் மணிகண்டனை பலமாக தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

கத்தியால் குத்தப்பட்டதில் பலத்த காயமடைந்த சரவணன் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், காயமடைந்த மணிராஜா புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காரையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணிகண்டன் உள்ளிட்ட 3 பேருக்கும் இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story