ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 2 டன் பூக்களால் அலங்காரம்


ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 2 டன் பூக்களால் அலங்காரம்
x
தினத்தந்தி 24 Dec 2019 10:30 PM GMT (Updated: 24 Dec 2019 6:46 PM GMT)

ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் நேற்று 2 டன் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

நாமக்கல்,

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இன்று (புதன்கிழமை) ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்படுகிறது. காலை 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பூக்களால் அலங்காரம்

இந்தநிலையில் நேற்று சென்னையை சேர்ந்த பக்தர்கள் கோவிலை பூக்களால் அலங்காரம் செய்தனர். கோவிலின் நுழைவுவாயிலில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி என மலர் மாலைகளால் அலங்காரம் செய்து இருந்தனர்.

இதற்காக வெள்ளை, சிவப்பு, மஞ்சள் மற்றும் ஊதா உள்ளிட்ட நிறங்களில் 2 டன் சாமந்தி, ஆஸ்டர் வகை பூக்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் தெரிவித்தனர்.

ஒளிபரப்ப ஏற்பாடு

ஆஞ்சநேயர் ஜெயந்திக்கான ஏற்பாடுகள் குறித்து கோவில் செயல் அலுவலர் ரமே‌‌ஷ் கூறியதாவது:-

கடந்த ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர். இந்த ஆண்டும் அதேபோல் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கிறோம். அவர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி அனைத்தும் செய்து உள்ளோம். விரைவாக சாமியை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.250, ரூ.20 கட்டணத்திலும், 2 இலவச தரிசனம் செய்யும் வழிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

காலை 11 மணி வரை மட்டுமே 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டு இருக்கும். எனவே அதன் பிறகு வரும் பக்தர்கள் வடைமாலை அலங்காரத்தை பார்வையிட அகன்ற திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே 1008 வடைகள் கொண்ட மாலைகளாக தொடுக்கும் பணி நேற்று விறுவிறுப்பாக நடந்தது. மேலும் பக்தர்கள் வரிசையாக சென்று தரிசனம் செய்ய வசதியாக போலீசார் தடுப்பு கட்டைகள் கட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர்.


Next Story