12 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நவீன இறைச்சி கூடம் இடிந்து விழும் அபாயம்


12 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நவீன இறைச்சி கூடம் இடிந்து விழும் அபாயம்
x
தினத்தந்தி 24 Dec 2019 10:45 PM GMT (Updated: 24 Dec 2019 7:02 PM GMT)

பாபநாசத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நவீன இறைச்சிக்கூடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் கடந்த 2007-ம் ஆண்டு ரூ.10 லட்சத்தில் நவீன இறைச்சி கூடம் கட்டப்பட்டது.

இந்த கூடத்தில் ஆடு அடிக்கும் தொட்டி மற்றும் 15-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன. இக்கட்டிடம் கட்டி 12 ஆண்டுகளுக்குமேலாகிறது. இந்த கட்டிடத்தின் உள்ளே 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான வேப்பமரம் உள்ளது. இம்மரத்தின் வேர்கள் கட்டிடத்தின் உள்ளே இருக்கிறது.

விரிசல்

இதனால் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டிட வளாகத்தில் 15 கடைகளில் பணியாற்றும் ஊழியர்களும், இறைச்சி வாங்குவதற்கு வரும் வாடிக்கையாளர்களும் அச்சத்துடன் வந்து செல்லும் நிலை உள்ளது.

இந்த கட்டிடத்தின் தடுப்பு சுவரும் இடிந்து உள்ளது. கட்டிடத்தில் அரசமரக்கன்றுகள் வளர்கின்றன. இதன் வேர்களாலும் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே கட்டிடம் இடிந்து அசம்பாவிதம் ஏற்படும் முன்பு நவீன இறைச்சி கூடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story