தேனுபுரீஸ்வரர் கோவில் குளத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறாத தெப்பத்திருவிழா


தேனுபுரீஸ்வரர் கோவில் குளத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறாத தெப்பத்திருவிழா
x
தினத்தந்தி 24 Dec 2019 10:30 PM GMT (Updated: 24 Dec 2019 7:04 PM GMT)

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் குளத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறாமல் உள்ள தெப்பத்திருவிழாவை மீண்டும் நடந்தவேணடும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இந்த கோவிலில் உள்ள துர்க்கையம்மனை தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்கிறார்கள். தேனுபுரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி, ஆனி மாதத்தில் நடைபெறும் முத்துபந்தல் விழா சிறப்பு பெற்றது. இந்த கோவில் முன்புறம் தெப்பக்குளம் உள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன் வீரபிரதாபதேவராயர் என்ற அரசனுக்கு குழந்தை பேறு இல்லாததால் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் ஓராண்டு இறைப்பணி செய்தார். பின்னர் குழந்தை பேறு கிடைத்தவுடன் தெப்ப திருவிழா நடத்த கோவிலின் கிழக்கு கோபுரம் முன் 3 ஏக்கர் பரப்பளவில் குளத்தை ஏற்படுத்தி திருமலைராஜன் ஆற்றிலிருந்து தண்ணீர் வரும் பாதையை அமைத்து தை மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று தெப்ப திருவிழாவை நடத்தினார்.

தெப்பத்திருவிழா

பின்னர் காலப்போக்கில் தெப்ப திருவிழா நடத்தப்படவில்லை. காவிரி ஆற்றில் தண்ணீர் வராததாலும், நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டதாலும் குளத்துக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 100 ஆண்டுகளுக்கு மேலாக தெப்ப திருவிழா நடைபெறவில்லை. தற்போது கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு குளத்துக்கு தண்ணீர் வரும் பாதை சீர்படுத்தப்பட்டது. தற்போது திருமலைராஜன் ஆற்றில் தண்ணீர் வருவதாலும், மழை பெய்து வருவதாலும் குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளது. எனவே தேனுபுரீஸ்வரர் கோவில் குளத்தில் தண்ணீர் நிரப்பி மீண்டும் தெப்பத்திருவிழா நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீரை குளத்துக்கு விட்டு வந்தால் ஆற்றில் தண்ணீர் குறைந்தாலும் மோட்டார் மூலம் தண்ணீரை குளத்தில் நிரப்பி தெப்ப உற்சவம் நடத்தலாம் என பக்தர்கள் கூறினர்.


Next Story