நினைவு நாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு, அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


நினைவு நாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு, அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 24 Dec 2019 10:30 PM GMT (Updated: 24 Dec 2019 7:37 PM GMT)

எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி புதுக்கோட்டையில் உள்ள அவருடைய சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

புதுக்கோட்டை,

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் எம்.ஜி.ஆரின் சிலை மற்றும் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அந்த கட்சியினர் புதுக்கோட்டை திலகர் திடலில் இருந்து பிருந்தாவனம் கார்னர், கீழராஜவீதி, அண்ணாசிலை வழியாக பழைய பஸ் நிலையம் வரை ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் செல்லத்துரை தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாநில மாணவரணி செயலாளர் விஜயகுமார், பாசறை மாநில துணை செயலாளர் சிவக்குமார், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தே.மு.தி.க.-அ.ம.மு.க.

இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நகர செயலாளர் வீரமணி தலைமையில் கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். புதுக்கோட்டை மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் செல்வின்ராஜூ தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதேபோல் பல்வேறு அமைப்புகள் சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அறந்தாங்கி, கறம்பக்குடி

இதேபோல் அறந்தாங்கியில் பெரியகடைவீதி அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் வேலாயுதம், நகர செயலாளர் ஆதிமோகனகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அ.ம.மு.க. சார்பில் அமைப்பு செயலாளர் சிவசண்முகம் உள்ளிட்டோர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர்.

கறம்பக்குடி ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு நகர செயலாளர் எம்.ஜி.ஆர். அப்துல்லா தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Next Story