கன்னியாகுமரி கடலில் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை ஜனாதிபதி பார்வையிட்டார்


கன்னியாகுமரி கடலில் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை ஜனாதிபதி பார்வையிட்டார்
x
தினத்தந்தி 25 Dec 2019 11:00 PM GMT (Updated: 25 Dec 2019 7:51 PM GMT)

கன்னியாகுமரி வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடலில் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டார். சூரியன் மறையும் காட்சியையும் ரசித்தார்.

கன்னியாகுமரி,

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன. எனவே விவேகானந்தர் நினைவு மண்டப பொன் விழாவை இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட விவேகானந்த கேந்திரா நிர்வாகம் முடிவு செய்து விழாக்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கும் விழா இன்று (வியாழக்கிழமை) விவேகானந்த கேந்திரா ஏக்நாத் அரங்கில் காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

இதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று மதியம் கன்னியாகுமரி வந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு 2.30 மணிக்கு வந்து இறங்கினார். அப்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் மனைவி சவிதா கோவிந்த், மகள் சுவாதி கோவிந்த் ஆகியோரும் உடன் வந்தனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வந்த ஹெலிகாப்டருக்கு பின்னால் மேலும் 2 ஹெலிகாப்டர்களில் பாதுகாப்பு அதிகாரிகள் வந்தனர்.

வரவேற்பு

ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பிறகு தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே மற்றும் விஜயகுமார் எம்.பி. ஆகியோர் வரவேற்றனர்.

அதன் பிறகு அரசு விருந்தினர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஓய்வெடுத்தனர்.

படகில் சென்றார்

இதைத் தொடர்ந்து பூம்புகார் படகு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான “விவேகானந்தா” என்ற படகில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தன்னுடைய குடும்பத்தினருடன் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்றார். அவருடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் சென்றார்.

முதலில் அங்குள்ள ஸ்ரீபாத மண்டபத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்றார். அங்கு பகவதியம்மன் பாதம் பதிந்த இடத்தில் மலர்களை தூவி வணங்கினார். பின்னர் சபா மண்டபத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஷர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்.

சூரியன் மறையும் காட்சி

அதன்பிறகு விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிப்பார்த்த அவர் அங்கிருந்தபடியே அருகே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து தியான மண்டபத்துக்கு சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்கு சிறிது நேரம் தியானம் செய்தார். பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், அவருடைய மனைவி மற்றும் மகளும் சூரியன் மறையும் காட்சியை பார்த்து ரசித்தனர்.

இதைத் தொடர்ந்து விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து மாலை 6.15 மணிக்கு அதே படகு மூலம் அவர் புறப்பட்டார். 6.25 மணிக்கு மீண்டும் கார் மூலம் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுத்தார்.

பாதுகாப்பு

ஜனாதிபதி வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த பாதுகாப்பில் சுமார் 1500 போலீசார் ஈடுபட்டு இருந்தனர். மேலும் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிலும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் படகுகளில் சுற்றி வந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்படைக்கு சொந்தமான ஒரு கப்பலும் பாதுகாப்புக்காக விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி வலம் வந்தது.

Next Story