சென்னை விமான நிலையத்தில் ரூ.21 லட்சம் தங்கம் பறிமுதல் - கேரள வாலிபர் கைது


சென்னை விமான நிலையத்தில் ரூ.21 லட்சம் தங்கம் பறிமுதல் - கேரள வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Dec 2019 10:30 PM GMT (Updated: 25 Dec 2019 8:14 PM GMT)

சென்னை விமான நிலையத்தில், சார்ஜாவில் இருந்து ரூ.21 லட்சம் தங்கம் கடத்தி வந்த கேரள வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அந்த விமானத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து உள்நாட்டு பயணியாக வந்த கேரளாவைச் சேர்ந்த வைஷ்ணவ் (வயது 24) என்பவர் சோதனைகளை முடித்துக்கொண்டு வெளியே செல்ல முயன்றார்.

அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால், அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

அதில் வைஷ்ணவ், தனது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.21 லட்சம் மதிப்புள்ள 615 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக கேரள வாலிபர் வைஷ்ணவை கைது செய்த அதிகாரிகள், அவர் யாருக்காக அந்த தங்கத்தை சார்ஜாவில் இருந்து கடத்தி வந்தார். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story