கோபி அருகே, மரத்தில் கார் மோதி விவசாயி பலி; 3 பேர் படுகாயம்


கோபி அருகே, மரத்தில் கார் மோதி விவசாயி பலி; 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 27 Dec 2019 9:30 PM GMT (Updated: 28 Dec 2019 12:42 AM GMT)

கோபி அருகே மரத்தில் கார் மோதி விவசாயி பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

கடத்தூர், 

அந்தியூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 75). விவசாயி. இவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அதனால் அவரை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக காரில் சென்றார்கள். காரை பொங்கியண்ணன் (45) என்பவர் ஓட்டினார். அவருக்கு அருகே பழனிச்சாமி உட்கார்ந்திருந்தார். பின் இருக்கையில் பழனிச்சாமியின் மகள் பூங்கொடி (45) மற்றும் உறவினர் பொன்னுசாமி (31) என்பவரும் அமர்ந்திருந்தார்கள்.

இந்தநிலையில் கார் கோபி அருகே கெட்டிச்செவியூர் கள்ளுமடைபிரிவு என்ற இடத்தில் சென்றபோது திடீரென நிலை தடுமாறியது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த ஒரு புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது.

இடிபாடுகளில் சிக்கி 4 பேரும் படுகாயம் அடைந்தார்கள். முன் இருக்கையில் உட்கார்ந்திருந்த பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்கள். பின்னர் 108 ஆம்புலன்சை வரவழைந்து படுகாயம் அடைந்திருந்த பூங்கொடி, பொன்னுசாமி, பொங்கியண்ணன் 3 பேரையும் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்கள். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story