கவர்னரின் மிரட்டலால் அதிகாரி ஒருவர் இறந்துவிட்டார் நாராயணசாமி பகீர் குற்றச்சாட்டு


கவர்னரின் மிரட்டலால் அதிகாரி ஒருவர் இறந்துவிட்டார் நாராயணசாமி பகீர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 28 Dec 2019 11:15 PM GMT (Updated: 28 Dec 2019 10:21 PM GMT)

கவர்னரின் மிரட்டலால் அதிகாரி ஒருவர் இறந்துவிட்டார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி பகீர் குற்றச்சாட்டை கூறினார்.

புதுச்சேரி,

காங்கிரஸ் கட்சியின் 135-வது ஆண்டு விழா அக்கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு கேக் வெட்டி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் வழங்கினார். தலைவர்களின் படங்களுக்கும் மரியாதை செலுத்தினார்.

அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

கொள்கை என்ன?

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் ஊர்வலம் பிரமாண்டமாக நடத்தினோம். இந்த சட்டத்துக்கு ஆதரவாக பாரதீய ஜனதாவும் ஊர்வலம் நடத்தியது. ஆனால் அந்த ஊர்வலத்தில் அவர்களது கூட்டணி கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கலந்துகொள்ளவில்லை. அதாவது ஒரு வண்டியின் வலது, இடது சக்கரம் கழன்றுவிட்டதுபோல் அவர்கள் நடந்துகொண்டுள்ளனர்.

ஊர்வலத்தில் கலந்துகொண்டால் சிறுபான்மையினரின் ஓட்டுகள் வராது என்ற எண்ணத்தில் அவர்கள் விலகி உள்ளனர். இது நிரந்தரமா? தற்காலிகமா? என்று தெரியவில்லை. அவர்களின் கொள்கைதான் என்ன?

வெற்றிகளை குவித்தோம்

எதிர்க்கட்சிகள் எதிரிக் கட்சியாக செயல்படுகின்றன. நாம் நல்லது செய்வதை எதிர்ப்பதால்தான் அவர்கள் காணாமல் போகிறார்கள். அவர்களது பலம் அவ்வளவுதான். லாஸ்பேட்டை தொகுதியில் டெபாசிட் வாங்காதவர்தான் பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன். ஆனால் அவர் கொல்லைப்புறமாக சட்டமன்றத்துக்கு வந்துள்ளார். புதுவையில் பாரதீய ஜனதா கட்சி பிற கட்சிகளை நம்பித்தான் உள்ளது.

காங்கிரஸ் கட்சியில் நம்மிடையே கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் தேர்தல் என்று வந்துவிட்டால் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். அதனால்தான் நடந்து முடிந்த பல தேர்தல்களில் வெற்றிகளை குவித்தோம்.

எங்கே போவர்கள்?

காமராஜ் நகர் தேர்தலுக்குப்பின் சோனியாகாந்தியை சந்தித்தோம். அப்போது அவர், ஆட்சி மற்றும் கட்சியை பற்றி விசாரித்தார். கட்சியின் செயல்பாடுகள் குறித்து அக்கறையோடு கேட்டறிந்தார். ஆட்சி வரும் போகும். ஆனால் கட்சிதான் நிரந்தரம்.

மதம், இனத்தின் பெயரால் மக்களை பிரிக்காதீர்கள் என்றுதான் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறோம். அம்பேத்கரின் அரசியல் சாசன சட்டத்தை நாம் மதிக்கிறோம். ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்தியாவில் இந்துகள் தான் வாழவேண்டும் என்கிறார். அப்படியானால் 100 ஆண்டுகளாக இங்கு வாழும் மற்ற மதத்தவர்கள் எங்கே போவார்கள்?

16 மாநிலம்

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று அறிவித்துள்ளோம். பாரதீய ஜனதா கூட்டணியில் உள்ள பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநில முதல்-மந்திரிகளும் அதையே கூறுகிறார்கள். கிட்டத்தட்ட 16 மாநில முதல்-மந்திரிகள் இந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள்.

இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்களும் நடந்து வருகிறது. பலர் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த சமயத்தில் பாரதீய ஜனதா கட்சியின் சூழ்ச்சிகளை முறியடிப்போம் என்று நாம் சபதம் எடுக்கவேண்டும்.

கவர்னர் மிரட்டலால்...

புதுவை அரசு தற்போது 5 விருதுகளை பெற்றுள்ளது. அதில் 4 விருதுகள் நிர்வாகம், கல்வி, மருத்துவம், சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றில் முதல் இடத்தில் இருப்பதற்காக வழங்கப்படுகிறது. மத்திய அரசு போதிய நிதி தராத நிலையிலும், கிரண்பெடி தொல்லைகள் கொடுத்தபோதும் நாம் இந்த விருதுகளை பெற்றுள்ளோம். தடைகள் இல்லாமல் இருந்தால் புதுச்சேரியை மினி சிங்கப்பூராக மாற்றுவோம்.

இந்திய நாட்டின் வளர்ச்சியே 4.5 சதவீதம்தான். ஆனால் புதுச்சேரியின் வளர்ச்சி 11.4 சதவீதமாக உள்ளது. இதனால் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க.வால் நம்மை விமர்சிக்க முடியவில்லை. கவர்னர் அதிகாரிகளை அழைத்து மிரட்டுகிறார். இதனால் ஒரு அதிகாரி இறந்துவிட்டார். அதிகாரம் இல்லாமலேயே அவர் அதிகாரிகளை மிரட்டுகிறார். இப்படி ஒரு கவர்னர் நமக்கு தேவையா? மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரிக்கான 3 மாத இழப்பீட்டை இன்னும் வழங்கவில்லை.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

Next Story