வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள 5 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு


வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள 5 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 29 Dec 2019 10:15 PM GMT (Updated: 29 Dec 2019 6:52 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் முதல் கட்ட தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள 5 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் முதல் கட்ட தேர்தல் திருவாரூர், மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய 5 ஒன்றியங்களில் கடந்த 27-ந்தேதி நடந்தது. வாக்குப்பதிவு நிறைவு அடைந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்பட்டு அந்தந்த ஒன்றியங்களில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

அதன்படி திருவாரூர் ஒன்றியத்திற்கு திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி, மன்னார்குடி ஒன்றியத்திற்கு மன்னார்குடி ராஜகோபால்சாமி அரசு கலைக்கல்லூரி, கோட்டூர் ஒன்றியத்திற்கு கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்கு திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முத்துப்பேட்டை ஒன்றியத்திற்கு முத்துப்பேட்டை பெரியநாயகி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சுழற்சி முறையில்

இதில் துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்த வாக்குப்பெட்டிகளில் அந்தந்த பகுதி ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்படுகிறது. பின்னர் அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி 10 ஒன்றியங்களின் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

Next Story