அரசு மற்றும் தனியார் பஸ்களில் துறையூரில் இருந்து திருச்சிக்கு கூடுதல் கட்டணம் வசூல்


அரசு மற்றும் தனியார் பஸ்களில் துறையூரில் இருந்து திருச்சிக்கு கூடுதல் கட்டணம் வசூல்
x
தினத்தந்தி 29 Dec 2019 10:30 PM GMT (Updated: 29 Dec 2019 7:41 PM GMT)

துறையூரில் இருந்து திருச்சிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. எனவே கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து திருச்சிக்கு நாள்தோறும் ஏராளமான அரசு மற்றும் தனியார் புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருச்சி செல்லும் பஸ்கள் அனைத்தும் துறையூரில் இருந்து காளிப்பட்டி, பகளவாடி, கரட்டாம்பட்டி, புலிவலம்,பெரமங்கலம், திருவெள்ளரை, மண்ணச்சநல்லூர், நொச்சியம், டோல்கேட், செக்போஸ்ட், திருவானைக்காவல், மாம்பழச்சாலை, அண்ணாசிலை வழியாக 41.5 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தை வந்தடைகின்றன. இதுவே புறவழிச்சாலையில் வந்தால் 44.5 கிலோ மீட்டர் ஆகும்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பழைய கொள்ளிடம் பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் அமைக்கும் பணி, திருவானைக்காவல் ரெயில்வே மேம்பால பணி மற்றும் மண்ணச்சநல்லூர் முதல் நொச்சியம் செல்லும் சாலையில் உள்ள வாய்க்கால்களில் பாலம் அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. இதனால் பஸ்கள் அனைத்தும் மாற்று வழியில், மண்ணச்சநல்லூரிலிருந்து சமயபுரம், டோல்கேட், புறவழிச்சாலை, சஞ்சீவி நகர் யூ திருப்பம், ஓயாமரி மயானம் வழியாக சத்திரம் பஸ்நிலையத்துக்கு இயக்கப்பட்டன. இதனால் வழக்கமான தூரத்தை விட 7 கிலோ மீட்டர் தூரம் பஸ்கள் சுற்றி வந்தன.

கூடுதல் பஸ் கட்டணம்

இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் பஸ்களின் இழப்பீட்டை ஈடுகட்ட பஸ் கட்டணத்தை தற்காலிகமாக உயர்த்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. அதன்படி துறையூரில் இருந்து திருச்சிக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது பாலப்பணிகள் நிறைவடைந்து மீண்டும் அனைத்து பஸ்களும் பழைய வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. ஆனால் பஸ்களில் தற்போதும் 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு உரிய கூடுதல் கட்டணமே வசூலிக்கப்படுகிறது. மேலும் அரசு பஸ்களில் எக்ஸ்பிரஸ் என்று கூடுதலாக ரூ.7 வசூலிக்கப்படுகிறது.

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறும்போது, துறையூரில் இருந்து திருச்சிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருச்சி டோல்கேட் வரை மட்டுமே பழைய கட்டணம் தொடர்கிறது. அதுவே சத்திரம் பஸ்நிலையத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. எனவே உரிய பயண கட்டணம் வாங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story