கல்லக்குடி அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் மீது தாக்குதல்


கல்லக்குடி அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 30 Dec 2019 11:00 PM GMT (Updated: 30 Dec 2019 8:50 PM GMT)

கல்லக்குடி அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் தாக்கப்பட்டார். அவரை கொல்ல முயற்சி நடைபெற்றதாக கூறப்படும் தகவலின்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லக்குடி,

திருச்சி மாவட்டம் கல்லக்குடியை அடுத்த கீழரசூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன்(வயது 40). கல்லக்குடி அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் இவர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர், தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு கீழரசூரில் இருந்து கல்லக்குடியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

கல்லக்குடி சமத்துவபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் வேலை நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் மோட்டார் சைக்கிள் மெதுவாக வந்தபோது போர்வைகளை போர்த்தியபடி வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே கிடந்தார்.

போலீசார் தீவிர விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த பார்த்திபனின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கல்லக்குடி போலீஸ் நிலையத்தில் பார்த்திபன் மனைவி அன்பழகி புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பார்த்திபனை கொலை செய்யும் நோக்கோடு மர்ம நபர்கள் தாக்கி உள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கேட்டுக் கொண்டதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story