2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 74.80 சதவீதம் வாக்குகள் பதிவு 48,136 பேர் வாக்களிக்கவில்லை


2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 74.80 சதவீதம் வாக்குகள் பதிவு 48,136 பேர் வாக்களிக்கவில்லை
x
தினத்தந்தி 30 Dec 2019 10:45 PM GMT (Updated: 30 Dec 2019 8:55 PM GMT)

வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கான 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 74.80 சதவீதம் வாக்குகள் பதிவானது. தேர்தலில் 48,136 பேர் வாக்களிக்கவில்லை.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 23-ந்தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர்கள் பட்டியலின் படி வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 1,91,032 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 93,997 ஆண் வாக்காளர்கள், 97,024 பெண் வாக்காளர்கள், 11 திருநங்கை வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். பெரம்பலூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மொத்தம் 355 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடந்தது. வேப்பந்தட்டை-ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 74.80 சதவீதம் வாக்குகள் பதிவானது. மொத்தம் 1,42,896 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில் 64,952 ஆண் வாக்காளர்களும், 77,944 பெண் வாக்காளர்களும் வாக்களித்துள்ளதாகவும், 29,045 ஆண் வாக்காளர்களும், 19,080 பெண் வாக்காளர்களும், திருநங்கை வாக்காளர்களில் யாரும் வாக்களிக்க வரவில்லை என்றும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 71.33 சதவீதம் வாக்குகளும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 78.81 சதவீதம் வாக்குகளும் பதிவானதாகவும் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது. மொத்தத்தில் வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 48,136 பேர் வாக்களிக்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை

வாக்குப்பதிவு முடிந்தவுடன் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் இருந்த வாக்கு பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உடும்பியம் ஈடன் கார்டன் மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது. இதே போல் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்ட வாக்குச்சாவடிகளில் இருந்த வாக்கு பெட்டிகள், பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பாதுகாப்புடன் அனுப்பப்பட்டது. வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் தான் வருகிற 2-ந்தேதி வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இதனால் வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

6-ந்தேதி பதவியேற்கின்றனர்

ஏற்கனவே கடந்த 27-ந் தேதி நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் வேப்பூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் வருகிற 2-ந்தேதி எண்ணப்பட உள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் நடத்தப்பட்ட நேர்முக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் வருகிற 6-ந் தேதி பதவியேற்கின்றனர். பின்னர் அவர்களை கொண்டு மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர்கள், கிராம ஊராட்சி துணை தலைவர்கள் ஆகிய பதவியிடங்களுக்கு வருகிற 11-ந்தேதியன்று மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

Next Story