குடியுரிமை திருத்த சட்டம் மூலம் முஸ்லிம்களை தனிமைப்படுத்த முயற்சி கி.வீரமணி பேட்டி


குடியுரிமை திருத்த சட்டம் மூலம் முஸ்லிம்களை தனிமைப்படுத்த முயற்சி கி.வீரமணி பேட்டி
x
தினத்தந்தி 30 Dec 2019 11:15 PM GMT (Updated: 30 Dec 2019 9:16 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டம் மூலம் முஸ்லிம்களை தனிமைப்படுத்த முயற்சி நடப்பதாக கி.வீரமணி கூறினார்.

திருச்சி,

ராணுவத்திலும் காவிமயமாக்க முயற்சி நடக்கிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு குடியுரிமை கொடுக்கும்போது நீதி என்னவென்றால் மதத்தின் அடிப்படையாக கொண்டு இடம் கொடுப்பதோ? அல்லது மறுப்பதோ? இருக்கக்கூடாது. ஆனால் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தில் முதல் முறையாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள், ஜைனர்களுக்கு இடம் உண்டு, முஸ்லிம்களுக்கு கிடையாது என்று சொல்லியிருக்கின்றனர்.

பாகிஸ்தானை இணைத்து அகண்ட பாரதத்தை உருவாக்க வேண்டும், இந்து நாடாக மாற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கொள்கையை அமல்படுத்துவதற்காக முதல் கட்டமாக இதனை கொண்டு வந்துள்ளது. முஸ்லிம்களை தனிமைப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். கொள்கை

நமது நாட்டில் மதங்களால் மக்கள் அவர்களுடைய நம்பிக்கைக்கு ஏற்ப இருக்கிறார்களே தவிர, நல்லிணக்கத்திற்கு இங்கு குறைவு இல்லை. முஸ்லிம்களை தனிமைப்படுத்தி அவர்களை எதிரிகளாக்குவது ஆர்.எஸ்.எஸ். கொள்கையில் ஒன்று. அதைத்தான் தங்களுக்கு கிடைத்திருக்கிற பலத்தின் மூலம் நிலைநாட்டி கொண்டிருக்கிறார்கள். அதை அடிப்படையாக கொண்டு குடிமக்கள் பதிவேடு உருவாக்கும் சூழல் இருப்பதால் நாடு கொந்தளிப்பாக உள்ளது. இந்த போராட்டத்தை யாரும் தூண்டவில்லை. மத்தியில் ஆளக்கூடியவர்கள் தான் தூண்டுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பின் புத்தூர் பெரியார் மாளிகையில் மணியம்மையார் நூற்றாண்டு அரங்கம் மற்றும் பெரியார் புத்தக நிலையத்தை கி.வீரமணி திறந்து வைத்தார். மேலும் பெரியாரின் பொதுவுடைமை சிந்தனைகள், அய்யாவின் அடிச்சுவட்டில், வாழ்வியல் சிந்தனைகள் ஆகிய புத்தகங்களை அவர் வெளியிட்டார். இதில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் சோம.இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story