மாவட்டத்தில் 2-ம் கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் ஓட்டு போட்டனர்


மாவட்டத்தில் 2-ம் கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் ஓட்டு போட்டனர்
x
தினத்தந்தி 30 Dec 2019 11:00 PM GMT (Updated: 30 Dec 2019 10:03 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2-ம் கட்ட தேர்தலில் நேற்று காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு முதல் கட்ட தேர்தல் கடந்த 27-ந் தேதி 8 ஒன்றியங்களில் நடைபெற்றது. இந்த நிலையில் மீதமுள்ள நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்தி, மோகனூர், எலச்சிப்பாளையம், எருமப்பட்டி, புதுச்சத்திரம் ஆகிய 7 ஒன்றியங்களில் நேற்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் 8 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், 86 ஒன்றிய குழு உறுப்பினர்கள், 150 ஊராட்சி மன்ற தலைவர்கள், 918 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 1,162 பதவி இடங்களுக்கு 3,579 பேர் போட்டியிடுகின்றனர்.

இவர்களை தேர்வு செய்ய 1 லட்சத்து 96 ஆயிரத்து 101 ஆண்கள், 2 லட்சத்து 6 ஆயிரத்து 139 பெண்கள், 15 திருநங்கைகள் என மொத்தம் 4 லட்சத்து 2 ஆயிரத்து 255 பேர் வாக்களிக்க வசதியாக 836 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு

இதன் தொடர்ச்சியாக ஓட்டுப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் இருந்து நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டன. தேர்தல் அதிகாரிகளும் நேற்று முன்தினமே வாக்குச்சாவடிகளுக்கு சென்று முன்னேற்பாடு பணிகளை கவனித்தனர். நேற்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

காலை முதலே ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதேபோல் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தங்களது பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.

தேர்தல் நடைபெற்ற 7 ஒன்றியங்களிலும் பெரும்பாலான முதியவர்கள் கம்பு ஊன்றி வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். சில இடங்களில் முதியவர்களை தூக்கி வந்து ஓட்டுபோட வைத்ததையும் காண முடிந்தது. மாற்றுத்திறனாளிகளை வாக்களிக்க அழைத்து செல்ல வசதியாக பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வீல்சேர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் வீல்சேர் வசதி இல்லாத வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய சிரமம் அடைந்தனர். அவர்களை சில வாக்குச்சாவடிகளில் சேரில் வைத்து தூக்கி செல்வதையும் பார்க்க முடிந்தது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். வயதான முதியவர்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

கன்னி வாக்காளர்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 2-வது கட்ட தேர்தலை பொறுத்த வரையில் நேற்று காலை 9 மணிக்கு 16.53 சதவீதமும், 11 மணிக்கு 36.13 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 51.90 சதவீதமும், பிற்பகல் 3 மணிக்கு 67.16 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன. கன்னி வாக்காளர்களும் ஆர்வமுடன் வந்து, முதல்முறையாக தங்களது வாக்குகளை மகிழ்ச்சியுடன் பதிவு செய்தனர்.

மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடிகளுக்கு வெளியே ஒருசில இடங்களில் வாக்கு சேகரிப்பதில் அரசியல் கட்சியினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் இடையே சிறு, சிறு தகராறு ஏற்பட்டாலும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story