கடந்த ஆண்டில் 4 முறை நிரம்பிய மேட்டூர் அணை 79 நாட்கள் 120 அடியாக இருந்தது


கடந்த ஆண்டில் 4 முறை நிரம்பிய மேட்டூர் அணை 79 நாட்கள் 120 அடியாக இருந்தது
x
தினத்தந்தி 31 Dec 2019 11:00 PM GMT (Updated: 31 Dec 2019 8:10 PM GMT)

கடந்த ஆண்டில் மேட்டூர் அணை 4 முறை நிரம்பியதுடன், 79 நாட்கள் 120 அடியாக இருந்தது.

மேட்டூர்,

தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் 2019-ம் ஆண்டு பருவமழை தீவிரம் அடைந்தது. இந்த மழை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணை கடந்த ஆண்டில் 4 முறை நிரம்பியது.

குறிப்பாக முதலில் செப்டம்பர் மாதம் 7-ந் தேதியும், அதே மாதம்24-ந் தேதியும், அக்டோபர் மாதம் 23-ந் தேதியும் அணை நிரம்பிய நிலையில், நவம்பர் மாதம் 11-ந் தேதி அணை 4-வது முறையாக நிரம்பியது. அணை நிரம்பி இருந்த நிலையில், அணைக்கு வரும் நீர்வரத்து, நீர்மின் நிலையங்கள் மற்றும் 16 கண் மதகுகள் வழியாக அப்படியே வெளியேற்றப்பட்டு வந்தது.

79 நாட்கள்

மேலும் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நேரங்களில் அதிகரித்தும், நீர்வரத்து குறையும் நேரங்களில் தண்ணீர் திறப்பு குறைத்தும் மாறி, மாறி திறந்து விடப்பட்டது. இதில் செப்டம்பர் மாதம் 7-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 15 நாட்களும், செப்டம்பர் மாதம் 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை 6 நாட்களும், அக்டோபர் மாதம் 23-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 7-ந் தேதி வரை 16 நாட்களும் அணை நீர்மட்டம் 120 அடியாக இருந்துள்ளது.

இந்த நிலையில் 4-வது முறையாக அணை நிரம்பிய நவம்பர் மாதம் 11-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 22-ந் தேதி வரை அணை நீர்மட்டம் 42 நாட்களாக 120 அடியாக இருந்தது. இதன்மூலம் கடந்த ஆண்டில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 நாட்கள் 120 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story