ஊரக உள்ளாட்சி தேர்தல்: 20 மையங்களில் நாளை ஓட்டு எண்ணிக்கை 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு


ஊரக உள்ளாட்சி தேர்தல்: 20 மையங்களில் நாளை ஓட்டு எண்ணிக்கை 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 31 Dec 2019 11:00 PM GMT (Updated: 31 Dec 2019 8:32 PM GMT)

சேலம் மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதையொட்டி 20 வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக கடந்த 27-ந் தேதி 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கும், 2-ம் கட்டமாக நேற்று முன்தினம் 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடந்தது. இதையடுத்து வாக்குச்சாவடியில் உள்ள வாக்குபெட்டிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு அந்தந்த ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

மொத்தம் 20 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

14,500 அலுவலர்கள்

இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை நாளை(வியாழக் கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிக்களுக்கான வாக்குச்சீட்டுகளை பிரிக்கும் பணிகளுக்கு அமைக்கப்படும் ஒரு மேஜையில் 1 மேற்பார்வையாளர், 3 உதவியாளர்கள் என 4 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள்.

மொத்தம் வாக்கு எண்ணும் பணியில் 14,500-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். மேலும் வாக்குச்சீட்டுகள் தொடக்க பிரிப்பு பணிகள், வாக்கு எண்ணும் பணிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படும். நுண்பார்வையாளர்கள் ஒவ்வொரு தொடக்க பிரிப்பு அறைகளுக்கும் ஒருவர் வீதமும், கூடுதலாக 4 பதவிகளுக்கு வாக்குச்சீட்டுகள் எண்ணும் பணியை கவனிக்க ஒருவர் வீதமும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்தல் முகவர்

வாக்கு எண்ணிக்கையின் போது அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் இடத்தில் வேட்பாளர்களோ அல்லது அவர்களின் தேர்தல் முகவரோ இருக்கலாம். வாக்கு எண்ணும் பணியில் ஒரு மேஜைக்கு ஒரு முகவர் என்ற விகிதத்தில் வேட்பாளர்கள் தங்களது முகவர்களை நியமிக்கலாம்.

வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்களோ அல்லது முகவர்களோ குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வாக்குகள் எண்ணும் இடத்திற்கு வர வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்போன் உள்ளிட்ட எந்த பொருட்களையும் எடுத்து செல்ல கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Next Story