ஓட்டப்பிடாரத்தில் அ.தி.மு.க. தொண்டர் கொலையில் 4 பேர் கைது


ஓட்டப்பிடாரத்தில் அ.தி.மு.க. தொண்டர் கொலையில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 1 Jan 2020 10:45 PM GMT (Updated: 1 Jan 2020 7:15 PM GMT)

ஓட்டப்பிடாரத்தில் அ.தி.மு.க. தொண்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓட்டப்பிடாரம், 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் யூனியன் பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 30-ந் தேதி நடந்தது. அப்போது மேட்டூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அருகே இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் அரிவாளால் தாக்கினர். இதில் ஒரு தரப்பை சேர்ந்த மாசானசாமி (வயது 54), அவரது ஆதரவாளரான சேசு என்ற சண்முகசுந்தரம் (55), ராமசாமி (45) ஆகிய 3 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

மற்றொரு தரப்பை சேர்ந்த ஓட்டப்பிடாரம் பச்சைபெருமாள் (55), அவரது மகன் ஜெயமுருகன் (28) ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. உடனடியாக காயம் அடைந்த 5 பேரையும் ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இருதரப்பு ஆதரவாளர்களும் ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். அப்போது அ.தி.மு.க. தொண்டரான ஓட்டப்பிடாரம் தெற்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் (58) என்பவர் ஆஸ்பத்திரிக்கு வந்தார். இவர் வேட்பாளர் இளையராஜா என்பவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தாராம். இதனால் அங்கு வந்த சிலர் மாரியப்பனை விரட்டி சென்று கல்லால் அடித்தும், ஆயுதங்களால் தாக்கியும் கொலை செய்தனர்.

இதுதொடர்பாக ஓட்டப்பிடாரம் போலீசார் மாசானசாமி, சண்முகசுந்தரம், ராமசாமி, முத்துமுருகன், ஆரோக்கியரவி, சதீ‌‌ஷ்குமார், தங்கமகராஜா, மணி ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மாசானசாமி, சண்முகசுந்தரம் ஆகியோர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். இதனால் ராமசாமி, முத்துமுருகன், சதீ‌‌ஷ்குமார், தங்கமகராஜா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது, வாக்குச்சாவடி அருகே எங்கள் உறவினரான மாசானசாமி நின்று கொண்டு இருந்தார். அவரை எதிர்தரப்பினர் தாக்கினர். இதில் காயம் அடைந்த மாசானசாமியை, சிகிச்சைக்காக ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றோம். அங்கும் எதிர்தரப்பினர் வந்தனர். இது எங்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் மாரியப்பனை கல்லால் தாக்கினோம். இதில் அவர் இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Next Story