ஊரக உள்ளாட்சி தேர்தல்: கரூர் உள்பட 8 ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு


ஊரக உள்ளாட்சி தேர்தல்: கரூர் உள்பட 8 ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 2 Jan 2020 11:00 PM GMT (Updated: 2 Jan 2020 5:40 PM GMT)

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்யும் பொருட்டு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கரூர் மாவட்டத்தில் கரூர் உள்பட 8 ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக் கை நடந்தது.

கரூர்,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், தாந்தோணி, க.பரமத்தி, அரவக்குறிச்சி ஆகிய 4 ஒன்றியங்களில் நடந்த முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 82.54 சதவீதமும் மற்றும் குளித்தலை, தோகைமலை, கடவூர், கிரு‌‌ஷ்ணராயபுரம் ஆகிய 4 ஒன்றியங்களில் நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 85.55 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன. தேர்தல் முடிந்ததும் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, அந்தந்த ஒன்றியங்களுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வைக்கப்பட்டன. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறை பூட்டி சீல் வைக்கப்பட்டு அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

8 வாக்கு எண்ணும் மையங்கள்

அந்த வகையில் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு வெண்ைணமலையில் உள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு என்.எஸ்.என் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியும், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு கொங்கு ஹைடெக் தொழில்நுட்பக்கல்லூரியும், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளியும், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்கு குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு புலியூர் ராணி மெய்யம்மை மெட்ரிக்குலேசன் பள்ளியும், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு மாரிஸ்ட் மேல்நிலைப்பள்ளியும், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு செர்வைட் மகளிர் கல்வியியல் கல்லூரியும் வாக்கு எண்ணும் மையங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். ஜனவரி 2-ந்தேதி வாக்கு எண்ணும் பணி நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும், வாக்கு எண்ணும் பணிக்காக பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டன.

வாக்குச்சீட்டுகளை தனித்தனியாக பிரித்து...

இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், தாந்தோணி உள்பட 8 ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிட்டவர்களில் வெற்றியாளர்களை தேர்வு செய்யும் பொருட்டு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் காலை 7 மணியளவில் வாக்குப்பெட்டிகள் இருப்பு அறையானது, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு வாக்குப் பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டு, வாக்குகளை பிரிக்கும் அறைக்கு கொண்டுவரப்பட்டது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு மஞ்சள், ஒன்றியக்குழு உறுப்பினருக்கு பச்சை, கிராம ஊராட்சி தலைவருக்கு இளஞ்சிவப்பு, ஊராட்சி மன்ற உறுப்பினருக்கு வெள்ளை ஆகிய 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் பெட்டிக்குள் இருந்ததால் அவை மொத்தமாக ஒரு பெட்டியில் கொட்டப்பட்டு தனித்தனியாக பிரிக்கப்பட்டன.

வாக்கு எண்ணும் பணி

பின்னர் அவை தேர்தல் அலுவலர்கள் மூலம் வாக்கு எண்ணும் அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. வாக்குச்சீட்டுகளை பிரிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டதால், மாவட்டத்தில் பெரும்பாலான மையங்களில் வாக்குகளை எண்ணும் பணி காலை 10.30-க்கு மேல் தான் தொடங்கியது. மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினருக்கு தனித் தனியாக வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு வாக்குச்சீட்டுகள் கொண்டுவரப்பட்டதும், வாக்கு எண்ணும் அலுவலர்கள் வாக்குச்சீட்டினை ஒவ்வொன்றாக பிரித்து அந்த ஓட்டு யாருக்கு செலுத்தப்பட்டு இருக்கிறது என்பதனை வேட்பாளர்களின் முகவர் களிடம் தூக்கி காண்பித்தனர். பின்னர் சின்னங்கள் வாரியாக வாக்குச்சீட்டுகள் பிரித்து வைக்கப்பட்டு மும்முரமாக எண்ணும் பணி தொடர்ச்சியாக நடந்தது. 8 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடந்திருப்பதால், எத்தகைய வாக்குகள் செல்லத்தக்கவை, செல்லத்தகாதவை என்பதை அறிய வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள், உதவியாளர் களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் வழங்கப்பட்டிருந்த கையேடு வினியோகம் செய்யப்பட்டிருந்தது. வேட்பாளர்களின் முகவர்கள் சில வாக்குகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் போது, அந்த கையேட்டினை அதிகாரிகள் புரட்டி பார்த்து விவரங்களை எடுத்து கூறினார்கள். இதற் கிடையே காலை 8 மணியளவில் இருந்தே தபால் வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டு, அதில் உள்ள தபால்களை பிரித்து வாக்குகளை எண்ணும் பணி நடந்தது.

சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிப்பு

கரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொங்கு கலை அறிவியல் கல்லூரி மையத்தில், வட்டார வளர்ச்சி அதிகாரியும், ஒன்றிய தேர்தல் அதிகாரியுமான பாலசந்திரன் மேற்பார்வையில் வாக்கு எண்ணும் பணி நடந்தது. அங்கு வாக்குப் பெட்டிகள் இருப்பு அறை, மைய வளாகம், வாக்கு எண்ணும் அறை, வாக்குச்சீட்டுகள் பிரிப்பு அறை உள்ளிட்டவை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. தேர்தல் அதிகாரி அறையில் உள்ள கணினி மூலம், தேர்தல் பணிக்காக வந்த கல்லூரி மாணவர்கள் அதனை பார்வையிட்டு விவரங்களை அதிகாரிகள், போலீசுக்கு தெரிவித்து கொண்டிருந்தனர். இதற்கிடையே ஒரு வாக்கு எண்ணும் அறையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் வேட்பாளர் களின் முகவர்கள் குவிந்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் மற்றும் போலீசார் சென்று விசாரித்தனர். பின்னர் சம்பந்தமில்லாத முகவர்களை வெளியேற்றினார்கள்.

தேர்தல் பார்வையாளர் ஆய்வு

மேலும் அ.தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் அரசுக்கு தொடர்பான ஒரு பொறுப்பில் இருப்பதாகவும், அவரை வாக்கு எண்ணும் அறைக்கு அனுமதிக்கக் கூடாது என தி.மு.க. முகவர்கள் ஆட்சேபனை தெரிவித்து போலீஸ் மற்றும் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே மாவட்ட தேர்தல் பார்வையாளர் வெங்கடாசலம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் ஆகியோர் கரூர் ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது வாக்குகள் பிரிக்கும் பணியை துரிதமாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். மேலும் வாக்கு பிரிக்கும், எண்ணுகிற இடத்திற்குள் வெளிநபர்களை அனுமதிக்கக்கூடாது, வீடியோ எடுக்கவும் அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தினர். 8 ஒன்றிய வாக்கு எண்ணும் மையங்களின் முன்பும் அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் திரண்டு நின்று கொண்டிருந்தனர். அப்போது தேர்தல் முன்னிலை, வெற்றி நிலவரங்கள் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்ட போது விசில் அடித்து ஆரவாரம் செய்ததை காண முடிந்தது. வாக்கு எண்ணும் பணி இரவு வரை நீடித்தது.


Next Story