தென்பெண்ணையாற்றில் தடுப்பணை அமைக்கக்கோரி, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை 19 கிராம விவசாயிகள் முற்றுகை


தென்பெண்ணையாற்றில் தடுப்பணை அமைக்கக்கோரி, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை 19 கிராம விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 2 Jan 2020 10:30 PM GMT (Updated: 2 Jan 2020 5:56 PM GMT)

தென்பெண்ணையாற்றில் தடுப்பணை அமைக்கக்கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை 19 கிராம விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள தெளி, லட்சுமிபுரம், கப்பூர், வெண்மணியாத்தூர், சத்திப்பட்டு, கொண்டங்கி, வெங்கடேசபுரம், தோகைப்பாடி, நன்னாடு, ஆலத்தூர், வேம்பட்டு, விராட்டிக்குப்பம், பாளையம், கோனூர், கொத்தமங்கலம், பெரும்பாக்கம், காணை, கருங்காலிப்பட்டு, சிறுவாக்கூர் ஆகிய 19 கிராமங்களை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

இவர்கள் அனைவரும் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பருவமழை காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமித்து வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்த ஏதுவாக தென்பெண்ணையாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோ‌‌ஷம் எழுப்பினர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதோடு, விவசாயிகள் 5 பேரை கலெக்டரிடம் அழைத்துச் சென்றனர். அப்போது விவசாயிகள், கலெக்டர் அண்ணாதுரையிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 5 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து விட்ட காரணத்தினால் ஏரி, குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆழ்துளை கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரின்றி தவித்து வருகிறோம்.

எங்கள் கிராம ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வராததற்கு காரணம் என்னவென்றால், தென்பெண்ணையாற்றில் அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி மணலை சுரண்டியுள்ளனர். சுமார் 15 அடி ஆழத்திற்கு ஆறு, பள்ளமாகி விட்டதாலும் வாய்க்கால் மேடாக உள்ளதாலும் ஆற்றுக்கு தண்ணீர் வந்தாலும் எங்கள் பகுதியில் உள்ள வாய்க்கால்களுக்கு தண்ணீர் வருவது கிடையாது.

எனவே தென்பெண்ணையாற்றில் பள்ளமான பகுதிகளை ஆய்வு செய்து வாய்க்கால் பிரியும் தெளிமேடு பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றில் தடுப்பணை அமைத்து வாய்க்கால்களை சீரமைத்து எங்கள் கிராம ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வருவதற்கு ஆவன செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே எங்கள் கிராம குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். அதேபோல் விவசாயமும் செய்ய முடியும். இதற்கு தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து விவசாயிகள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story