முத்துப்பேட்டை ஒன்றியத்தில் ஒரு ஓட்டில் வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர்


முத்துப்பேட்டை ஒன்றியத்தில் ஒரு ஓட்டில் வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர்
x
தினத்தந்தி 4 Jan 2020 11:00 PM GMT (Updated: 4 Jan 2020 6:45 PM GMT)

முத்துப்பேட்டை ஒன்றியத்தில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பெண் கவுன்சிலர் வெற்றி பெற்றார்.தபால் ஓட்டால் காங்கிரஸ் வெற்றி மாறியது.

முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 9-வது வார்டுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ரோஜா பானு (சுயேச்சை), ஜெகபர் நாச்சியா (காங்கிரஸ்), இந்திராணி (சுயேச்சை), சரளா (பா.ஜ.க.), லட்சுமி (சுயேச்சை), மாலதி (சுயேச்சை), ‌ஷீலா (சுயேச்சை) ஆகிய 7 பேர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெகபர் நாச்சியா 772 வாக்குகள் பெற்று வெற்றி முகத்தில் இருந்தார். அடுத்தப்படியாக சுயேச்சை வேட்பாளர் ரோஜா பானு ஒரு வாக்கு குறைவாக 771 வாக்குகள் பெற்று தோல்வி முகத்தில் இருந்தார். இந்தநிலையில் தபால் ஓட்டுகள் 5 இருந்தது. இதனை இரு வேட்பாளர்களும் எதிர்பார்த்து இருந்தனர். பின்னர் 5 தபால் வாக்குகளில் 2 ஓட்டு சுயேச்சை வேட்பாளர் ரோஜா பானுக்கும், இந்திராணி, சரளா, மாலதி ஆகியோருக்கு தலா ஒரு ஓட்டும் கிடைத்தது. இதனால் ரோஜாபானு 773 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளரை விட ஒரு வாக்கு கூடுதலாக பெற்றார்.

சான்றிதழ்

இதனையடுத்து தேர்தல் அலுவலர்களால் ரோஜா பானு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஒரு ஓட்டில் ஜெகபர் நாச்சியா தோல்வி அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தேர்தல் அலுவலரிடம் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தும்படி புகார் மனு கொடுத்தார். ஆனால் தேர்தல் அலுவலர்கள் ரோஜா பானுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கினர்.


Next Story