ஏலகிரிமலையில் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு - பெற்றோர் கண் எதிரே பரிதாபம்


ஏலகிரிமலையில் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு - பெற்றோர் கண் எதிரே பரிதாபம்
x
தினத்தந்தி 5 Jan 2020 11:00 PM GMT (Updated: 5 Jan 2020 7:57 PM GMT)

ஏலகிரிமலையில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு பெற்றோர் கண் எதிரே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜோலார்பேட்டை,

காஞ்சீபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 33), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்றுமுன்தினம் மனைவி பொன்னி மற்றும் மகள் ருத்ரா (வயது 10), மகன் ரோஷன் (6) ஆகியோருடன் ஏலகிரிமலைக்கு சென்றார். இங்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு இரவு தனியார் விடுதியில் தங்கினர்.

அதைத் தொடர்ந்து நேற்றும் ஏலகிரிமலையில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு மாலை 4 மணி அளவில் அத்தனாவூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ‘கேம்’ சென்டருக்கு வந்தனர். அங்கு நீச்சல் குளத்தில் சிறுவன் ரோஷன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்தான்.

இதைக்கண்டு ஜானகிராமனும், பொன்னியும் மகனை மீட்க முடியாமல் நீச்சல் குளத்தை சுற்றி சுற்றி ஓடி வந்து, குழந்தையை காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர். அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் நீச்சல் குளத்தில் இருந்து சிறுவனை மீட்டனர். அப்போது சிறுவன் மயங்கிய நிலையில் இருந்ததால் சிகிச்சைக்காக அத்தனாவூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டான். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து ஏலகிரிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் ‘கேம்’ சென்டர் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story