ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் குவிந்தனர்


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 5 Jan 2020 10:45 PM GMT (Updated: 5 Jan 2020 8:05 PM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று இரவு மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் சேைவ சாதித்தார். சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் குவிந்தனர்.

ஸ்ரீரங்கம்,

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் எல்லாம் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி விழாவாகும். பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 26-ந்தேதி திருெநடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 27-ந்தேதியில் இருந்து நம்பெருமாள் தினமும் காலை மூலஸ்தானத்தில் இருந்து வெவ்வெறு அலங்காரங்களில் புறப்பாடாகி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேைவ சாதித்து வந்தார்.

பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். ஆழ்வார்கள், பக்தர்கள் புடைசூழ அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் மாலை 4.30 மணி வரை சேவை சாதித்தார். பின்னர் கருட மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

இன்று சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல்திறப்பு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4.45 மணிக்கு நடக்கிறது. சொர்க்கவாசலில் எழுந்தருள்வதற்காக நம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை மற்றும் திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்பாடாகிறார். சரியாக 4.45 மணிக்கு சொர்க்கவாசலை கடந்து செல்லும் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள மணல் வெளி திருக்கொட்டகையில் அதிகாலை 5 மணிக்கு எழுந்தருள்வார். அப்போது பக்தர்கள் நம்பெருமாளை மிக அருகில் இருந்து தரிசனம் செய்ய முடியும்.

இதனை தொடர்ந்து சாதரா மரியாதை அளிக்கப்பட்ட பின்னர் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்வார். காைல 8.15 மணி முதல் மாலை 5.30 மணி வரை பொதுமக்கள் நம்ெபருமாளை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அரையர் சேவை நடைபெறும். இரவு 9.30 மணிக்கு பொதுஜன சேவையுடன் உபயதாரர் மரியாதை நடைபெறும். இரவு 11 மணிக்கு நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்திய இசையுடன் அதிகாலை 12.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். நம்பெருமாள் கடந்து செல்லும் பரமபதவாசல் இன்று இரவு 10 மணி வரை திறந்து இருக்கும்.

ஜொலிக்கும் ராஜகோபுரம்

சொர்க்கவாசல் திறப்பையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் விழாக்கோலம் பூண்டு உள்ளது. கோவிலின் அனைத்து விமானங்கள், கோபுரங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. 234 அடி உயர ராஜகோபுரத்தில் அடிப்பகுதியில் இருந்து உச்சி வரை பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. பூக்களால் அலங்காரம் செய்யும் பணியில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். மின்னொளியில் ராஜகோபுரம் ஜொலிக்கிறது.

பக்தர்கள் குவிந்தனர்

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டும் இன்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் நேற்று இரவே வந்து குவிந்து விட்டனர். அவர்கள் பிரகாரங்களில் தங்கி இருந்தனர். நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவே வரிசையில் காத்து நின்றனர்.

வைகுண்ட ஏகாதசி விழாவில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டு உள்ளது. தற்காலிக மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளன.


Next Story