சுயேச்சை உறுப்பினர்களை இழுக்கும் விதமாக ‘அ.தி.மு.க. குதிரை பேரத்தில் ஈடுபடாது’ அமைச்சர் பேட்டி


சுயேச்சை உறுப்பினர்களை இழுக்கும் விதமாக ‘அ.தி.மு.க. குதிரை பேரத்தில் ஈடுபடாது’ அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 5 Jan 2020 11:00 PM GMT (Updated: 5 Jan 2020 10:29 PM GMT)

குதிரை பேரம் பேசி சுயேச்சை உறுப்பினர்களை இழுக்கும் வேலையில் அ.தி.மு.க. ஈடுபடாது என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.

பள்ளிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நேற்று ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கினர். இதையடுத்து அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற்றது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த தேர்தல் வரக்கூடாது என்று பல்வேறு செயல்களை செய்தார். ஆனால் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்.

குதிரை பேரம்

தேர்தல் விதிமுறைகள் இருந்ததால் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் காலிபணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. அதற்கு விரைவில் எழுத்து தேர்வு நடத்தப்படும். தமிழகத்தில் எங்கெல்லாம் மின்கம்பங்கள் சேதமடைந்து இருந்தாலும் அதை மாற்றும் பணி கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பழைய மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 1.95 கோடி ரே‌‌ஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 245 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளன. குதிரை பேரம் பேசி சுயேச்சை உறுப்பினர்களை இழுக்கும் வேலையில் அ.தி.மு.க. எந்த காலத்திலும் ஈடுபடாது. கட்சியின் மேல் பற்று கொண்டு வருகிறவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்கிறோம்.

தவறான பிரசாரம்

மேலும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் செய்து வருகின்றனர். இதுகுறித்து நாளை மறுநாள் (புதன்கிழமை) சட்டப்பேரவையில் முழு விவரங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட கலெக்டர் மெகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story