வாரவிடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் தடையை மீறி அருவியில் குளித்து மகிழ்ந்தனர்


வாரவிடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் தடையை மீறி அருவியில் குளித்து மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 5 Jan 2020 11:00 PM GMT (Updated: 5 Jan 2020 10:29 PM GMT)

வாரவிடுமுறையையொட்டி நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தடையை மீறி அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

பென்னாகரம்,

சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். தற்போது ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று வாரவிடுமுறை நாள் என்பதால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு தடையை மீறி மெயின் அருவி மற்றும் காவிரி கரையோரம் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து மெயின் அருவி, ஐந்தருவி வழியாக மணல் திட்டு வரை காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசலில் சென்றனர்.

தீவிர ரோந்து

தொடர்ந்து அவர்கள் மீன் அருங்காட்சியகம், முதலை பண்ணை, சிறுவர் பூங்கா, தொங்கு பாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஒகேனக்கல் பஸ் நிலையம், நடைபாதை, அஞ்செட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. அவர்கள் மீன் மார்க்கெட்டுக்கு சென்று தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி சமையல் தொழிலாளர்களிடம் கொடுத்து உணவு சமைத்து சாப்பிட்டனர். கூட்டம் அதிக அளவில் இருந்ததால் கடைகள், ஓட்டல்களில் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

சுற்றுலா பயணிகள் குவிந்ததால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார், ஊர்க்காவல் படையினர் ஊட்டமலை, ஆலாம்பாடி, மணல் திட்டு, பரிசல்துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பபெருக்கின் போது மெயின் அருவியின் இரும்பு தடுப்பு கம்பிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் அருவியில் குளிக்க தடை விதித்தது. இந்த தடை 3 மாதத்திற்கும் மேலாக நீடிக்கிறது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் தடையை மீறி மெயின் அருவியில் குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story