பாவூர்சத்திரம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி மர்மநபர்களுக்கு வலைவீச்சு


பாவூர்சத்திரம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Jan 2020 10:30 PM GMT (Updated: 7 Jan 2020 9:21 PM GMT)

பாவூர்சத்திரம் அருகே மர்மநபர்கள் 2 பேர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றனர். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பாவூர்சத்திரம்,

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே முத்துகிரு‌‌ஷ்ணாபேரியில் ஆலங்குளம்- சுரண்டை மெயின் ரோட்டில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் தனியார் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் ஏ.டி.எம். மையத்துக்கு உள்ளே சென்றுள்ளனர். இரும்பு கம்பியால் எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். எந்திரத்தை உடைக்கும் போது சத்தம் கேட்டு இடத்தின் உரிமையாளர் செல்வராஜ், சத்தம் போட்டுக் கொண்டே அங்கு வந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் பணம் திருடு போகாமல் தப்பியது.

இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். மேலும் தடயவியல் நிபுணர்களும் வந்து, சோதனை நடத்தினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story