திருவள்ளூர் அருகே கர்ப்பிணி தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்


திருவள்ளூர் அருகே கர்ப்பிணி தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்
x
தினத்தந்தி 8 Jan 2020 11:15 PM GMT (Updated: 8 Jan 2020 6:54 PM GMT)

திருவள்ளூர் அருகே கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பட்டரைபெருமந்தூர், மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் நவீன் (வயது 24). ஆட்டோ டிரைவர். காதல் திருமணம் செய்த இவருக்கு தமிழரசி (22) என்ற மனைவியும், அனன்யா ( 2) என்ற மகளும் உள்ளனர். தற்போது தமிழரசி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்துக் கொண்ட நவீன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

வீட்டில் தனியாக இருந்த தமிழரசி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தமிழரசியின் தந்தை மார்ட்டின் (46) தன்னுடைய மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் இது குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட கங்காதரன் உத்தரவின்பேரில் திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யாமல் கால தாமதம் செய்வதாக கூறி தமிழரசியின் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி எதிரே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழரசிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் அவரது சாவு குறித்து திருவள்ளூர் ஆர்.டி.ஓ வித்யா விசாரித்து வருகிறார்.

Next Story