குடும்ப தகராறில் மனைவி விஷம் குடித்தார்: போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


குடும்ப தகராறில் மனைவி விஷம் குடித்தார்: போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 9 Jan 2020 11:00 PM GMT (Updated: 9 Jan 2020 7:51 PM GMT)

குடும்ப தகராறில் மனைவி விஷம் குடித்ததால் போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர், 

வேலூரை அடுத்த ஊசூர் வீராரெட்டிபாளையம் கிராமத்தை ேசர்ந்தவர் ராஜேஷ் (வயது 32), வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். ராஜேசுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த பிரியா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிரியா தற்கொலைக்கு முயன்றது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் ராஜேஷ் மருத்துவமனைக்கு சென்று பிரியாவை பார்த்து விட்டு வீட்டுக்கு சென்றார்.

இதையடுத்து வீட்டில் ராஜேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரின் உடலை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், பிரியா தற்கொலை முயற்சி குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். குடும்ப தகராறில் பிரியா தற்கொலைக்கு முயன்றதால், ராஜேஷ் போலீஸ் விசாரணைக்கு பயந்திருக்கலாம். இதனால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கருதுகிறோம். மேலும் குடும்ப பிரச்சினையால் அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளது. நாங்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம், என்றனர்.

Next Story