செந்துறை அருகே, ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு - உறவினர்கள் இல்லாததால் பரிதாபம்


செந்துறை அருகே, ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு - உறவினர்கள் இல்லாததால் பரிதாபம்
x
தினத்தந்தி 9 Jan 2020 10:45 PM GMT (Updated: 9 Jan 2020 8:05 PM GMT)

செந்துறை அருகே ஏரியில் வாலிபர் மூழ்கி உயிரிழந்தார். அடக்கம் செய்ய உறவினர்கள் இல்லாததால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

செந்துறை, 

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நிண்ணியூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவா(வயது 30). இவரது தாய், தந்தை இறந்துவிட்ட நிலையில், ஆதரவு இல்லாமல் தவித்த சிவாவை அவரது பாட்டி வளர்த்து வந்தார். இந்த நிலையில் அவரும் இறந்து விட்டார். இதனால் மனநிலை பாதிக்கப்பட்டு ஆதரவு இல்லாமல் சுற்றித்திரிந்த சிவா நேற்று மாலை செந்துறை பஸ்நிலையத்தில் உள்ள சித்தேரியில் தண்ணீர் குடிக்க சென்றுள்ளார். அப்போது ஏரியில் தவறி விழுந்து தத்தளித்தார். இதனை கண்ட இளைஞர்கள் சிலர் காப்பாற்ற முயன்றனர். ஆனால் சிவா ஏரியில் மூழ்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு சிவாவை சடலமாக மீட்டனர். மீட்கப்பட்ட உடலை கரைக்கு கொண்டு வந்தனர்.

அதன்பின்னர் போலீசாரும், வருவாய் துறையினரும் அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யாரும் உறவினர் என்றோ, அவரது உறவினர்களை தெரியும் என்றோ முன்வரவில்லை. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சிவாவின் குடும்ப சூழல் தெரியவந்தது. அதனை தொடர்ந்து சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story