அவினாசி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பிடித்தது; பெண் உயிர் தப்பினார்


அவினாசி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பிடித்தது; பெண் உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 10 Jan 2020 11:30 PM GMT (Updated: 10 Jan 2020 11:30 PM GMT)

அவினாசி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் வீடு தீப்பிடித்து எரிந்தது. அந்த வீட்டில் இருந்த பெண் சாமி தரிசனம் செய்ய சென்றதால் உயிர்தப்பினார்.

அவினாசி, 

அவினாசி அருகே உள்ள பெரிய கருணைபாளையத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 52). கூலி தொழிலாளி. இவருடைய வீடு ஓடால் வேயப்பட்டது.

இந்த வீட்டில் சரஸ்வதி மட்டும் தனியாக வசித்து வருகிறார். இவர் வீ்ட்டின் முன்பு உள்ள வராண்டாவில் கியாஸ் சிலிண்டரை வைத்து சமையல் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டை பூட்டி விட்டு சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு சரஸ்வதி சென்று விட்டார்.

சிறிது நேரத்தில் இவருடைய வீட்டின் வராண்டாவில் வைத்து இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் சிலிண்டரின் பாகங்கள் வீட்டில் இருந்து சற்று தொலைவு வரை வந்து விழுந்தன. சிலிண்டர் வெடித்தவுடன் வீடு தீப்பிடித்து எரியத்தொடங்கியது. உடனே அருகில் உள்ளவர்கள் தண்ணீரை கொண்டு தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. உடனே அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.அதற்குள் வீட்டின் பீரோவில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. வீட்டின் மேற்கூரையும் முற்றிலும் எரிந்து சேதமானது.

கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியபோது சரஸ்வதி வீட்டில் இல்லாததால் உயிர் தப்பினார். அதே நேரம் கியாஸ் சிலிண்டர் எப்படி வெடித்தது என்று தெரியவில்லை. இது குறித்து அவினாசி போலீசாார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story