குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jan 2020 11:34 PM GMT (Updated: 10 Jan 2020 11:34 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி முஸ்லிம் அமைப்பினர் திருப்பூரில் பள்ளிவாசல்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருப்பூர்,

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முஸ்லிம் அமைப்பினர் சார்பில் திருப்பூரில் உள்ள பள்ளிவாசல்கள் முன்பு நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஐக்கிய சுன்னத் ஜமாஅத், திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் திருப்பூர் சி.டி.சி. கார்னர், காதர்பேட்டை, மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பள்ளிவாசல்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெரியபள்ளிவாசல் நிர்வாகி ஜக்கரியா, உலமாக்கள் ரியாஜ், நாசர், கரீம், அலாவுதீன், காதர்பேட்டை பள்ளிவாசல் நிர்வாகிகள் மகபூப், நாசர், முகமது ரபி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்ட னர். இதுபோல் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பிலும் திருப்பூர் ராஜீவ்நகர் பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக சி.டி.சி. கார்னர் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க. மாவட்ட தலைவர் நஷ்ரூதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் முஸ்தபா உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். சி.டி.சி. கார்னர் பகுதியில் ஏராளமானவர்கள் சாலையை மறித்து நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அபுசாலிக் நிருபர்களிடம் கூறும்போது, “ குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பினர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளனர். ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும்” என்றார்.

போராட்டத்தை முன்னிட்டு தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார், போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் கஜேந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதற்கிடையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திருப்பூர் மண்டலத்தில் உள்ள 90 பள்ளிவாசல்கள் முன்பும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 

Next Story