உளுந்தூர்பேட்டை அருகே, லாரி மீது கார் மோதல்; டிரைவர் பலி


உளுந்தூர்பேட்டை அருகே, லாரி மீது கார் மோதல்; டிரைவர் பலி
x
தினத்தந்தி 10 Jan 2020 10:30 PM GMT (Updated: 11 Jan 2020 12:21 AM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

உளுந்தூர்பேட்டை,

அரியலூர் அருகே உள்ள செந்துறையை சேர்ந்த நாராயணசாமி என்பவருடைய மகன் ராமச்சந்திரன். இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவதற்காக விமானத்தில் சென்னைக்கு நேற்று அதிகாலையில் வந்து சேர்ந்தார்.

அவரை அரியலூர் பள்ளக்காவேரியை சேர்ந்த வாடகை கார் டிரைவர் சிரஞ்சிவி(வயது24) காரில் அழைத்துக்கொண்டு அரியலூருக்கு புறப்பட்டார். உளுந்தூர்பேட்டை பைபாஸ் அருகே உள்ள அஜீஸ்நகர் பகுதியில் வந்த போது அந்த கார், முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி டிரைவர் சிரஞ்சிவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராமச்சந்திரன் படுகாயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிரஞ்சிவி உடல் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டதால் தீயணைப்பு படையினர் நிலைய அதிகாரி ஜமுனா ராணி தலைமையில் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சிரஞ்சிவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story