வாக்குச்சீட்டுகளை மென்று தின்ற பா.ம.க. உறுப்பினர் மறுதேர்தல் நடத்தக்கோரி அதிகாரியிடம் முறையிட்டதால் பரபரப்பு


வாக்குச்சீட்டுகளை மென்று தின்ற பா.ம.க. உறுப்பினர் மறுதேர்தல் நடத்தக்கோரி அதிகாரியிடம் முறையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Jan 2020 11:00 PM GMT (Updated: 11 Jan 2020 6:33 PM GMT)

வாக்குச்சீட்டுகளை மென்று தின்றுவிட்டு மறுதேர்தல் நடத்தக்கோரிய பா.ம.க. உறுப்பினரால் கொள்ளிடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கொள்ளிடம்,

நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் மொத்தம் 23 வார்டுகள் உள்ளன. இங்கு 13 இடங்களை தி.மு.க. கூட்டணியும், 9 இடங்களை அ.தி.மு.க. கூட்டணியும் கைப்பற்றியது. ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.

தி.மு.க. கூட்டணி 13 இடங்களை கைப்பற்றியதால் தி.மு.க. உறுப்பினர் ஒன்றியக்குழு தலைவராகி விடுவார் என்ற சூழல் இருந்தது. நேற்று ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தி.மு.க. உறுப்பினர் வெற்றி

வாக்குப்பதிவு நடவடிக்கைகள் கேமராவில் பதிவு செய்யப்பட்டன. ஒன்றியக்குழு தலைவரை தேர்வு செய்வதற்காக 23 உறுப்பினர்களும் அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.

இதில் தி.மு.க.வை சேர்ந்த ஜெயபிரகா‌‌ஷ் 13 வாக்குகள் பெற்றதை அடுத்து அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. உறுப்பினர் நற்குணன் 10 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.

மென்று தின்றார்

இந்த நிலையில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதிவு செய்த வாக்குச்சீட்டுகள் ஒரு பெட்டியில் தனித்தனியாக வைக்கப்பட்டு இருந்தன. அப்போது அங்கு வந்த பா.ம.க. மாவட்ட செயலாளரும், ஒன்றியக்குழு உறுப்பினருமான அன்பழகன் ஒன்றியக்குழு தலைவராக வெற்றி பெற்ற ஜெயபிரகாசுக்கு ஆதரவாக பதிவான வாக்குச்சீட்டுகளில் 3 வாக்குச்சீட்டுகளை வாயில் போட்டு மென்று தின்று தண்ணீர் குடித்தார்.

பின்னர் அவர் தேர்தல் நடத்தும் அதிகாரி கலைச்செல்வியிடம் சென்று தி.மு.க. உறுப்பினருக்கு 10 வாக்குகள்தான் பதிவாகி உள்ளது, எங்களுக்கும் 10 வாக்குகள் தான் பதிவாகி உள்ளது. எனவே மறுதேர்தல் நடத்தக்கோரி முறையீடு செய்தார்.

அறிவுறுத்தல்

இதையடுத்து அதிகாரிகள், ‘‘வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவித்து விட்டோம். இந்த நிலையில் இவ்வாறு முறையிடுவது தவறு. வாக்குப்பதிவு நடவடிக்கைகள் அனைத்தும் கேமராவில் பதிவாகி உள்ளன.

எனவே மறுதேர்தல் நடத்த முடியாது’’ என கூறி பா.ம.க. உறுப்பினரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

வாக்குச்சீட்டுகளை மென்று தின்ற பா.ம.க. உறுப்பினரின் இந்த செயலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story