கிரு‌‌ஷ்ணகிரியில் எருது விடும் விழா முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது


கிரு‌‌ஷ்ணகிரியில் எருது விடும் விழா முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 11 Jan 2020 10:30 PM GMT (Updated: 11 Jan 2020 7:04 PM GMT)

கிரு‌‌ஷ்ணகிரியில் எருது விடும் விழா முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது.

கிரு‌‌ஷ்ணகிரி,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடக்கிறது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- பொங்கலை முன்னிட்டு எருது விடும் விழா நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள கிராமங்களில் மட்டும் நடத்த வேண்டும். வேறு இடங்களில் நடத்த கூடாது. அவ்வாறு நடத்தினால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்றே எருது விடும் விழா நடத்த வேண்டும்.

அனுமதி பெறாமல் விழா நடத்த ஏற்பாடு செய்பவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். விழாவை நடத்த வருவாய்த்துறை, காவல்துறை, மருத்துவத்துறை, தீயணைப்புத்துறை, மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகளை கொண்டு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

தடுப்பு அரண்

மேலும் இந்த குழுவில் எருதுவிடும் விழாவை மேற்பார்வையிட தேர்ந்த விவசாய நிபுணர்கள், அரசு சாராத சமூக சேவகர்கள், கொடையாளர்கள், விலங்கு நல ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் ஆகியோர் மேற்படி நடுநிலை தணிக்கை குழுவில் இடம் பெறுவார்கள். நிகழ்ச்சியில் பங்கு பெறும் காளைகளுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்த கூடாது. மேலும் அவை போதிய பாதுகாப்புடன் உள்ளதா? என உறுதி செய்ய வேண்டும்.

எருது விடும் விழா நடத்தப்படும் இடத்தில் மரத்தால் ஆன 2 அடுக்கு தடுப்பு அரண் அமைக்க வேண்டும். இதை பொதுப்பணித்துறை தணிக்கை செய்து சான்று பெற வேண்டும். காளைகளுக்கு ஊக்க மருந்துகள் கொடுக்கப்படுகிறதா? என பரிசோதித்து சான்று அளிக்க வேண்டும்.

தயார் நிலையில்

காளைகளுக்கு தொற்று நோய் இல்லை என கால்நடை பராமரிப்புத்துறை சான்று அளிக்க வேண்டும். மேலும் மருத்துவ சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவ குழு, ஆம்புலன்ஸ் வசதி செய்திருக்க வேண்டும். குடிநீர் வசதி, சுகாதார வசதிகள் செய்ய வேண்டும். காவல் துறையினர் விழா நிகழ்ச்சிகள் முழுவதையும் கேமராவில் பதிவு செய்ய வேண்டும். தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். எருது விடும் விழாவை மாவட்டத்தில் அமைதியாக நடத்திட அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, உதவி கலெக்டர்கள் தெய்வநாயகி, குமரேசன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் மனோகரன், துணை இயக்குனர் இளங்கோவன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story